உத்தரபிரதேசத்தில் ரூ.80 ஆயிரம் கோடி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

புதுடெல்லி:

பிரதமர் மோடி உத்தரபிரதேசத்தில் முதலீட்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக அம்மாநிலத்துக்கு இன்று காலை சென்றார். அவரை லக்னோ விமான நிலையத்தில் மாநில கவர்னர் ஆனந்திபென் பட்டேல், மத்திய பாதுகாப்பு, மந்திரி ராஜ்நாத்சிங், மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் வரவேற்றனர். பின்னர் லக்னோவில் உள்ள இந்திராகாந்தி அரங்கில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றார். இதில் ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான 1406 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

வேளாண் மற்றும் அதனை சார்ந்த துறை, தகவல் தொழில்நுட்பம், மற்றும் மின்னணு, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறை, உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மருந்து உற்பத்தி, சுற்றுலா, பாதுகாப்பு கைத்தறி மற்றும் நூல் ஆகிய துறையில் ரூ.80 ஆயிரம் கோடி திட்டங்கள் செயல்படுவதாக அதில் அரசு ரூ.4459 கோடி முதலீடு செய்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில், பிரபல தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர்.

பிற்பகலில் கான்பூரில் உள்ள பராங்க் கிராமத்திற்கு பிரதமர் மோடி செல்கிறார். அங்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் இணைந்து பத்ரிமாதா மடத்துக்கு செல்கிறார். அதைத் தொடர்ந்து அம்பேத்கர் பவன், மிலன் கேந்திராவுக்கு செல்ல உள்ளார்.

ஜனாதிபதியின் மூதாதையர் இல்லமான மிலன் கேந்திரா, மக்கள் பயன்பாட்டுக்காக நன்கொடையாக அளிக்கப்பட்டு சமுதாய கூடமாக செயல்பட்டு வருகிறது. அதனை மோடி பார்வையிடுகிறார்.

பின்னர் பராங்க் கிராமத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.