ராஜஸ்தானை சேர்ந்த இளைஞருக்கு கொடூரம் ஜம்முவில் வங்கியில் நுழைந்து மேலாளர் சுட்டு படுகொலை: தீவிரவாதிகள் அட்டூழியம்

புதுடெல்லி, : ஜம்மு காஷ்மீரில் நேற்று வங்கிக்குள் நுழைந்த தீவிரவாதி, அங்கு பணியாற்றிய  இளம் மேலாளரை சுட்டுக் கொன்றான். ஜம்மு காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக அப்பாவி மக்கள், அரசு ஊழியர்கள், சிறுபான்மையினர், போலீசார் போன்றவர்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்று பரபரப்பு ஏற்படுத்தி வருகின்றனர். கடந்த மாதம் தாசில்தார் அலுவலகத்தில் நுழைந்த தீவிரவாதிகள், பண்டிட் பிரிவை சேர்ந்த ராகுல் பட் என்ற ஊழியரை சுட்டுக் கொன்றனர். இதைத் தொடர்ந்து, 2 போலீசாரையும் கொன்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே 2 ஆசிரியைகளை சுட்டு கொன்றனர். இதனால், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் இடையே பீதி நிலவுகிறது. இந்நிலையில், குல்காம் மாவட்டம், அருகே மோகன்போராவில் உள்ள எல்லாக்கி தெஹாதி வங்கியில் நேற்று திடீரென நுழைந்த தீவிரவாதி, அங்கிருந்த விஜயகுமார் என்ற மேலாளரை சுட்டுக் கொன்றான். இவர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஹனுமன்கர் பகுதியை சேர்ந்தவர். கடந்த பிப்ரவரியில்தான் திருமணம் நடந்தது. மனைவி அங்கேயே இருக்கிறார். அடுத்த 2 வாரத்தில் சொந்த மாநிலத்துக்கு விஜயகுமார் செல்ல இருந்த நிலையில், தீவிரவாதி அவருடைய உயிரை பறித்து விட்டான். இந்த தாக்குதலுக்கு பல்வேறு கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பயந்து, 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு ஊழியர்கள், தங்களை சொந்த மாநிலத்துக்கு மாறுதல் செய்யும்படி வலியுறுத்தி, போராட்டத்தில் குதித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.