‘எப்படி சொல்றது…? என் கனவை நனவாக்கிய..’- நடிகர் சூர்யா உருக்கமான ட்வீட்

உலக நாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்தது குறித்து நடிகர் சூர்யா ட்விட்டரில் உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இத்தனை ஆண்டுகளாக இல்லாத வகையிலான புரமோஷன், தமிழ் மற்றும் மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்கள், படத்தில் கமலுக்கு ஜோடியில்லை, முதன் முறையாக அனிருத் இசை, லோகேஷ் கனராஜ் இயக்கம் என ஏகப்பட்ட பிரமிப்புகளுக்கு இடையே நேற்று வெளியான திரைப்படம் ‘விக்ரம்’. எதிர்பார்த்தைவிட ‘விக்ரம்’ படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்ததில் படக்குழு சற்று திக்குமுக்காடி போயுள்ளது.

கமலுக்கு இன்னும் கொஞ்சம் காட்சிகள் கொடுத்திருக்கலாம், இரண்டாம் பகுதி சற்று நீளம் என ஆங்காங்கே சில குறைபாடுகள் தோன்றினாலும், பொதுவாக ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக வரவேற்பு பெற்று வருகிறது ‘விக்ரம்’. பட வெளியீட்டிற்கு முன்னதாகவே, ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமத்தால் சுமார் 200 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளதாக கூறப்படுகிறது.

image

மேலும் ‘விக்ரம்’ படம் வெளியான முதல் நாளே 35 முதல் 40 கோடி வரை வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. படம் வெளியான சில நாட்களிலேயே 100 கோடி ரூபாய் கிளப்பில் இணையலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் படத்தில் அனைத்து கதாபாத்திரங்களுமே ரசிக்க வைக்கும் வகையிலும், முக்கியத்துவம் வாய்ந்ததாக திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதாலும் ரசிகர்கள் திரையரங்குக்கு சென்று பார்க்க ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவின் கதாபாத்திரம் மாஸாக அமைந்திருப்பதால், அவரது ரசிகர்கள் பயங்கர உற்சாகத்தில் உள்ளனர். இந்நிலையில், நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், கமலுடன் திரைப்படத்தில் இணைந்து நடிக்க வேண்டும் என்ற நெடுநாள் கனவு நினைவாகியிருப்பதாகவும், அதனை இந்தப் படத்தின் மூலம் சாத்தியப்படுத்தியதற்கு நன்றி என்று கூறி உருக்கத்துடன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். நடிகர் சூர்யா, கமலை அண்ணா என்று குறிப்பிட்டுள்ள இந்தப் பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.