ரசாயன கேஸ் கசிந்து 200 பெண்கள் மயக்கம்; ஆஸ்பத்திரியில் அட்மிட்

திருமலை: தொழிற்சாலையில் ரசாயன கேஸ் கசிந்து 200 பெண்களுக்கு மயக்கம், மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆந்திர மாநிலம், அனகாப்பள்ளி மாவட்டம், அச்சுதாபுரத்தில் உள்ள போரஸ் நிறுவனத்தில் நேற்று பகலில் வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென தொழிற்சாலையில் இருந்து அமோனியா வாயு கசிந்தது. இதனால் அங்கு பணியாற்றி வரும் பெண் ஊழியர்களுக்கு மயக்கம், மூச்சுதிணறல் ஏற்பட்டது. 200க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டனர். பலர் வாந்தி எடுத்து மயங்கினர்.அவர்கள் அனைவரையும் மீட்டு கார் மற்றும் அங்குள்ள வாகனங்களில் கொண்டு சென்று தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஊழியர்கள் மயங்கி விழுந்ததால் பீதியடைந்த மற்ற தொழிலாளர்கள் தொழிற்சாலையை விட்டு அலறியடித்து வெளியேறினர். தகவலறிந்து வந்த மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வாயு கசிவு ஏற்படாமல் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டனர். இதுகுறித்து தொழிற்சாலை துறை அமைச்சர் அமர்நாத் கூறுகையில், சம்பவம் குறித்து அறிக்கை வந்த பின்னர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.