நார்வே செஸ் போட்டி: 5-வது சுற்றில் உலக சாம்பியன் கார்ல்செனை வீழ்த்தி முதலிடம் பிடித்தார் விஸ்வநாதன் ஆனந்த்!

ஸ்டாவஞ்சர்,

முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள கிளாசிக்கல் செஸ் போட்டி நார்வேயில் நடைபெற்று வருகிறது.கிளாசிக்கல் செஸ் தொடரின் 4-வது சுற்று ஆட்டத்தில் முன்னாள் உலக சாம்பியனான இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த், அமெரிக்காவின் வெஸ்லி சோவை சந்தித்தார். இதில் ஆனந்த் தோல்வி அடைந்தார்.

கிளாசிக்கல் செஸ் போட்டியின், முதல் 3 சுற்றுகளில் தொடர்ச்சியாக வெற்றி கண்ட ஆனந்த் சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். இதனை தொடர்ந்து, 4-வது சுற்று முடிவில் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் ‘உலகின் நம்பர் ஒன்’ வீரரான மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) ஆகியோர் தலா 8.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தனர்.

இந்நிலையில், நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டியின் 5-வது சுற்று போட்டி நடைபெற்றது. அதில் ‘உலகின் நம்பர் ஒன்’ வீரரான மாக்னஸ் கார்ல்செனை இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் எதிர்கொண்டார்.

பரபரப்பாக நடைபெற்ற இந்த 5-வது சுற்றில், ‘உலகின் நம்பர் ஒன்’ வீரரான மேக்னஸ் கார்ல்சனை, விஸ்வநாதன் ஆனந்த் வீழ்த்தினார். இதன்மூலம், நார்வே செஸ் போட்டியில் புள்ளிப்பட்டியலில் 52 வயதான விஸ்வநாதன் ஆனந்த் 10 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.