சென்னை: குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாகதமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், நாமக்கல், கரூர், திருச்சி ஆகிய 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். நாளை தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில், இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வரும் 8-ம் தேதி தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களிலும், 9-ம் தேதி ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். வெப்பநிலை 86 டிகிரி முதல் 104டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும்.
நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் தம்மம்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் (பொறுப்பு)பா.கீதா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.