தஞ்சாவூர் கரந்தை பகுதியில் கஞ்சா போதைக்கு அடிமையான கும்பல் ஒன்று நேற்று (வியாழக்கிழமை) இரவு அப்பகுதியில் ஏற்பட்ட திடீர் மின் வெட்டை பயன்படுத்தி கடைகளில் புகுந்து அரிவாள் மற்றும் கத்தியைக் காட்டி வணிகர்களை மிரட்டி பணம் பறித்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தின் போது பணம் தர மறுத்த வணிகர்களை அக்கும்பல் அரிவாளால் வெட்டியதில் 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வணிகர்கள் கூறியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 16 வயது சிறுவன் உள்பட இரண்டு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கரந்தைப் பகுதியில் வியாழக்கிழமை இரவு திடீரென மின் வெட்டு ஏற்பட்டுள்ளது. அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் கொண்ட கும்பல் அப்பகுதியில் உள்ள மருந்துக் கடை, மளிகை கடை உள்ளிட்ட ஐந்து கடைகளில் அரிவாளைக் காட்டி மிரட்டி பணத்தை பறித்துச் சென்றுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடையே பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதில் அதே பகுதியைச் சேர்ந்த மளிகைக் கடை நடத்திவரும் செந்தில் என்பவர் பணம் தர மறுத்ததால் அவரை கொள்ளையர்கள் அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. ஐந்து இடங்களில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவத்தில் பணம்ம கொடுக்க மறுத்ததால், கொள்ளையர்கள் அரிவாளால் வெட்டியதில் படுகாயம் அடைந்த 3 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் கரந்தை பகுதி பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், வணிகர்கள் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் தங்களிடம் அரிவாளைக் காட்டி மிரட்டி பணம் பறித்துச் சென்ற கொள்ளையர்களை கைது செய்யக்கோரி கடையடைப்புச் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக வணிகர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும், அரிவாளைக் காட்டி மிரட்டி பணம் பறித்த கொள்ளையர்களை கைது செய்யக் கோரியும் வணிகர் சங்க பேரவை தஞ்சை மாநகர தலைவர் வாசுதேன் தலைமைமயில வணிகர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி ப்ரியாவை சந்தித்து மனு கொடுத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மருந்துக் கடை ஊழியர் முருகானந்தம் (49) அளித்த புகாரின் பேரில், தஞ்சாவூர் நகர கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் உள்பட இரண்டு நபர்களை கைது செய்துள்ளனர்.
கைதான இருவரில் ஹரிஹரன் என்ற 21 வயது இளைஞர் போலீஸாரை கண்டதும் தப்பி ஓடியபோது வழுக்கி விழுந்ததில் அவரது வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இதையடுத்து அவர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
எஸ்.இர்ஷாத் அஹமது தஞ்சாவூர்