மக்கள் குறை கேட்பு மையமாக மாறிய ஆளுநர் மாளிகை… அரசியலை பற்ற வைத்த தமிழிசை!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான தமிழிசை சௌந்தரராஜன், தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராக பொறுப்பேற்றபோது, கவர்னர் மாளிகையில் மக்கள் தர்பார் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். ஆனால் கொரோனா பொது முடக்கம் காரணமாக, தான் அளித்த இந்த லாக்குறுதியை அவரால் உடனடியாக நிறைவேற்ற இயலாமல் போனது.

தற்போது கொரோனா தாக்கம் குறைந்துள்ளதையடுத்து, தான் முன்பு சொன்னபடி, ஆளுநர் மாளிகையில் மக்கள் தர்பாரை நடத்த அவர் முடிவு செய்தார். அண்மை காலமாக தெலங்கானாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதையடுத்து, முதலில் பெண்களை நேரில் அழைத்து குறைகேட்பு நிகழ்ச்சியை நடத்த அவர் திட்டமிட்டார்.

இந்த திட்டத்தின் கீழ் மாநில ஆளுநரை சந்திக்க விருப்பமுள்ள பெண்கள் தங்களது பெயரை பதிவு செய்ய தனி தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரி ஆகியவை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. தொலைபேசி வாயிலாக, மின்னஞ்சல் மூலமும் சுமார் 500 பெண்கள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை சந்திக்க விருப்பம் தெரிவித்திருந்தனர்.

அவர்கள் இன்று மதியம் 12 மணிக்கு ஆளுநர் தமிழிசை சந்திக்க அனுமதிக்கப்பட்டனர். அவர்களிடம் குறைகளை கேட்டறிந்த ஆளுநர், அவற்றை மாநில அரசின் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆளுநர் மாளிகையை பொதுமக்களின் குறை கேட் பு மையமாக மாற்றி உள்ளது அரசியல் ரீதியில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் “இதற்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ள தமிழிசை, அரசில் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் எல்லா அலுவலகங்களும் மக்கள் செல்லும் இடமாகவும், அவர்களின் பிரச்னைகளையும் தீர்க்கும் இடமாகவும் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளதுடன்,. மாதமொரு முறை இதேபோல் மக்கள் சந்திப்பு நடத்த திட்டமிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.