இரண்டாவது நாளாக 200+ | தமிழகத்தில் புதிதாக 217  பேருக்கு கரோனா பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று ஆண்கள் 110, பெண்கள் 107 என மொத்தம் 217 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 111 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 57,133 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 34 லட்சத்து 17,887 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 145 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 1,231 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 217 ஆகவும், சென்னையில் 129 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே,

தமிழகத்தில் கரோனா தொற்று குறித்தும், எடுக்கப்படவேண்டிய தொடர் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் கரோனோ தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பல அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார். அவை:

> தமிழகத்தில் இதுவரை கரோனா நோய்த்தொற்றின் தாக்கம் குறைவாகவே காணப்பட்டாலும், இதனை மேலும் உயராமல் கட்டுப்படுத்த வேண்டும்.

> கரோனா சிகிச்சை வசதிகளை தயார் நிலையில் வைக்கவேண்டும்.

> கரோனா கட்டுப்பாட்டுப் பணிகளை சுகாதாரத் துறை, உள்ளாட்சித் துறை, நகராட்சி நிர்வாகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை போன்ற துறைகளை ஈடுபடுத்தி உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

> பணி செய்யும் இடங்கள், திருவிழாக்கள், திருமணங்கள், கூட்டங்கள், நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் மக்களிடையே ஒரு சிலர் தொற்றால் பாதிக்கப்படும்போது, அனைவரையும் பரிசோதனை செய்து, தொடர் கண்காணிப்பு செய்து, உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.

> முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், தனிமனித இடைவெளியைக் கடைபிடித்தல் ஆகியவற்றை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

> போதிய பரிசோதனைகள், தொடர் கண்காணிப்பு, சிகிச்சை மற்றும் தடுப்பூசி ஆகியவற்றை முறையாக பின்பற்றிட பொதுமக்களிடையே தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

> தடுப்பூசி ஒன்றே கொரோனாவை வெல்லும் ஆயுதம் என்பதால், மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது.

இதுவரை 93.82 விழுக்காடு நபர்கள் முதல் தவணை தடுப்பூசியும், 82.94 விழுக்காடு நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசியும் போட்டுக் கொண்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் 43 லட்சம் நபர்கள் முதல் தவணை கொரோனா தடுப்பூசியும், 1.20 கோடி நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசியும், என மொத்தம் 1.63 கோடி நபர்கள் இன்னும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டியுள்ளது.

எனவே, தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, தடுப்பூசி போடுவதால் ஏற்படும் நன்மைகளை விளக்கி, அவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நிலையை உருவாக்கிட வேண்டும்.

முன்னதாக, இன்று காலை நேர நிலவரப்படி இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு 8,000-ஐ இன்று கடந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 8,329 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்றைய பாதிப்பு 7,584 என்பது கவனிக்கத்தக்கது.

கரோனா நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்கள்: இந்தியாவில் இதுவரை 194.92 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 40,370 ஆக உள்ளது. கரோனா சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 0.09 % உள்ளது. குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.69 % ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4,216 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் கரோனாவிலிருந்து சுமார் 4,26,48,308 பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 8,329 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 2.41 சதவீதமாகவும், வாராந்திர பாதிப்பு விகிதம் 1.75% உள்ளது. இதுவரை மொத்தம் 85.45 கோடி கரோணா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 3,44,994 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.