தமிழகத்தில் 2 நாட்கள் இடியுடன் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் லேசானமழை பெய்யக் கூடும்.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகப் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் 11, 12-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

சென்னையில் அடுத்த 48 மணிநேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கக் கூடும்.

10-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரை மாவட்டம் கள்ளந்திரியில் 7 செமீ மழை பதிவாகியுள்ளது.

11, 12-ம் தேதிகளில் தென்மேற்குஅரபிக்கடல், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், தெற்கு மகாராஷ்டிரா, கோவா, கேரளா மற்றும் கர்நாடக கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 40முதல் 50 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக் கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.