திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் முதன்முறை: மே மாத உண்டியல் வசூல் ரூ.130 கோடி…

திருப்பதி: உலகிலேயே பணக்கார கடவுளாக கருதப்படும் திருப்பதி வெங்கடாஜலபதி உண்டியல் வசூலில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அளவுல் வசூலாகி உள்ளது. மே மாத வசூல் ரூ.130கோடி ஆக உள்ளது. இது திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் முதன்முறை என்று கூறப்படுகிறது.

உலகம் முழுவதும் இருந்து திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கோடீசுவரர்கள் முதல் அடிமட்ட மக்கள் வரை அனைவரும், திருப்பதி ஏழுமலையாலனை சந்தித்தால், ஏற்றம் வரும் என்ற நோக்கில், அவரை தரிசித்து தங்களது மனக்குறைகளை நீக்கி வருகின்றனர்.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப் பட்டதால், பக்தர்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. ஆனால், கடந்த சில மாதங்களாக கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டு விட்டதால், ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

கோடை விடுமுறை காலமான கடந்த மாதம் திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதி வருகிறது. ஏழுமலையான தரிசிக்க 72மணி நேரம் வரை காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டது. மே மாதத்தின் முதல் 4 நாட்களிலேயே வசூல் களைகட்டியது. மே 1ந்தேதி அன்று  75,010. பக்தர்கள் சுமார் 4 மணி நேரம் தரிசனம் செய்துள்ளனர். அன்று மட்டும் 4.70 கோடி ரூபாய் உண்டியலில் வசூலானதாகவும்,  மே 2ஆம் தேதி திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 65,756 பக்தர்கள் வந்துள்ளனர். அன்று மட்டும் 4.60 கோடி ரூபாய் உண்டியலில் வசூலாகியுள்ளது என்றும், மே 3ந்தேதி  மட்டும் 4.06 கோடி ரூபாய் உண்டியலில் வசூலானதாகவும், மே 4ஆம் தேதி திருப்பதி கோயிலுக்கு 69,603 பக்தர்கள் வந்துள்ளனர். அன்று மட்டும் 3.84 கோடி ரூபாய் உண்டியலில் வசூலாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில்,  திருப்பதி ஏழுமலையான் கோவிலின் கடந்த மே மாத உண்டியல் வருமானம் ரூ.130 கோடி வசூலாகி உள்ளது என்று திருப்பதி தேவஸ்தான் அறிவித்து உள்ளது. இது திருப்பதி தேவஸ்தான வரலாற்றிலேயே இதுவே அதிகபட்ச உண்டியல் வருமானம் என  கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.