திருமணத்துக்கு மறுப்பு; விவாகரத்தான பெண் மீது ஆசிட் வீச்சு – பெங்களூருவில் அதிர்ச்சி

பெங்களூரில் விவாகரத்தான 32 வயது பெண் தன் மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்ததுடன், அதே பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றியும் வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த அஹமத் (36) என்பவரும் அதே தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளார். இவர்கள் இருவரும் நட்பாகப் பழகிவந்துள்ளார். ஆனால் அது காலப்போக்கில் அஹமது மனதில் காதலாக மாறியுள்ளது.

அதனால் கடந்த சில வாரங்களாக அஹமது அந்த பெண்ணிடம் “நாம் இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எனவே நாம் திருமணம் செய்துகொள்வோம். எனக்கும் திருமணத்துக்குப் பெண் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். நான் உன்னைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன்” எனக் கூறி தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு பலமுறை கேட்டுள்ளார். ஆனால், அந்த பெண் தான் விவாகரத்து ஆனவர் என்பதாலும், மூன்று குழந்தைகளுக்குத் தாய் என்பதாலும் அஹமத்தைப் புறக்கணித்துள்ளார்.

ஆசிட் வீச்சு

இதனால் ஆத்திரமடைந்த அஹமத் நேற்று காலை அந்த பெண் தொழிற்சாலைக்குப் பணிக்கு செல்லும் ஜே.பி.நகர் அருகே சரக்கி சாலை சந்திப்பில் மறைந்திருந்து அந்த பெண் மீது ஆசிட் வீசிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். ஆசிட் வீச்சால் 30% தீக்காயம் ஏற்பட்டு வலது கண் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. உடனே அக்கம்பக்கத்தினர் அந்த பெண்ணை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. “அந்த பெண்ணின் உயிருக்கு ஆபத்தில்லை. அவரது பார்வையும் ஓரளவு மீட்டெடுக்கப்பட்டுள்ளது. அவர் விரைவில் பூரண குணமடைவார் என நம்புகிறோம்” என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் அஹமதை காவல்துறை தேடிவருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.