National Herald Case: நேஷனல் ஹெரால்டு வழக்கு: ராகுல் காந்தி ஆஜர்!

நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணக்காக, டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆஜரானார்.

நேஷனல் ஹெரால்டு வழக்கில், சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக, காங்கிரஸ் கட்சி இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, அவரது மகனும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது, அமலாக்கத் துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில், விசாரணைக்காக ஆஜராகும்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு, அமலாக்கத் துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினர்.

இதை பெற்றுக் கொண்ட ராகுல் காந்தி, வெளிநாட்டு சுற்றுப்பயணம் காரணமாக சம்மனில் குறிப்பிட்டுள்ள தேதியில் விசாரணைக்கு ஆஜராக முடியாது என்றும், இந்தியா வந்ததும் வேறொரு தேதியில் ஆஜராவதாகவும், அமலாக்கத் துறைக்கு அவகாசம் கேட்டு கடிதம் எழுதி இருந்தார்.

இதை ஏற்றுக் கொண்ட அமலாக்கத் துறை, ஜூன் 13 ஆம் தேதி (இன்று) ஆஜராகும்படி, ராகுல் காந்திக்கு புதிய சம்மனை அனுப்பியது. இதற்கிடையே, மத்திய பாஜக அரசு பழிவாங்கும் நோக்கில், ராகுல் காந்திக்கு அமலாக்கத் துறை மூலம் மிரட்டல் விடுப்பதாகக் கூறி, இதைக் கண்டித்து, போராட்டம் நடத்தப்படும் என்றும் காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

இதன்படி இன்று, தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் குவிந்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள், மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு அனுமதி தரப்படாததால், போராட்டத்தில் ஈடுபட்டோரை டெல்லி போலீஸ் கைது செய்தனர்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து, அமலாக்கத் துறை அலுவலகம் வரை, கட்சித் தொண்டர்களுடன் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி பேரணியாக நடந்து சென்றனர். இதை அடுத்து, நேஷனல் ஹெரால்டு வழக்கில், சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக, ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.