விருந்துக்கு வரச்சொல்லி, அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது வேதனையளிக்கிறது – கமல்ஹாசன்.!

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த சோழபுரம் அருகே உள்ளது துளுக்கவெளி. இந்த கிராமத்தை சேர்ந்த பட்டியில் இன வகுப்பை சேர்ந்தவர் என்று சொல்லப்படும் சரண்யா (24 வயது) என்பவரும், திருவண்ணாமலை மாவட்டம் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மோகன் (31 வயது) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். 

காதல் விவகாரம் சரண்யா வீட்டில் தெரிய வரவே, காதலன் மாற்று சமூகம் என்பதால் அவரின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், சரண்யாவின் சகோதரரான சக்திவேல் தனது மைத்துனர் ரஞ்சித் என்பவருக்கு சரண்யாவை திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்து வந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சரண்யா, கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி, திருவண்ணாமலை சென்று மோகனை திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர் சென்னையில் வசித்து வந்த அவர்களை, விருந்து வைக்க உள்ளதாக சகோதரர் சக்திவேல் வரவழைத்துள்ளார்.

அண்ணன் மேல் உள்ள பாசத்தால் நம்பி வந்த சரண்யா மற்றும் அவரின் காதல் கணவர் மோகன் இருவரும், சக்திவேல் வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது வீட்டு வாசலில் வைத்து இருவருக்கும் சக்திவேல் தண்ணீர் கொடுத்துள்ளார். இருவரும் தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும் போதே, சக்திவேல் மற்றும் அவரின் மைத்துனர் ரஞ்சித் ஆகியோர் புதுமண தம்பதிகளை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “கும்பகோணம் அருகே காதல் திருமணம் செய்த இளம் தம்பதியை, விருந்துக்கு வரச்சொன்ன  பெண்ணின் அண்ணன், இருவரையும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது வேதனையளிக்கிறது.

வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டால், அவர்களைக் கொல்வதுதான் கௌரவமா? கொலையாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும். காதலில்  கெளரவம் பார்க்கத் தேவையில்லை; ஆணவமும் அவசியமில்லை  என்று மக்களிடம் மாற்றம் ஏற்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.