குரங்கு அம்மை நோய்; சர்வதேச அளவில் பொதுசுகாதார அவசரநிலையாக அறிவித்த உலக சுகாதார நிறுவனம்!

ஜெனீவா,

உலகம் முழுவதும் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. இதுவரை 58 நாடுகளில் இந்த நோய் தாக்கியுள்ளது. உலகளவில், 3,417க்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில், குரங்கு அம்மை நோய் தொற்று பரவல் தொடர்பாக, இன்று அவசரக் கூட்டத்தை நடத்தவுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருந்தது.

குரங்கு அம்மை நோய் தொற்றானது, சர்வதேச அளவில், கொரோனா போன்று பொதுசுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட வேண்டுமா என்பதை ஆராய்ந்து முடிவெடுக்க இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறுகையில், “குரங்கு அம்மை நோய் பரவுவது அசாதாரணமானது மற்றும் கவலைக்குரியது” என்றார்.

இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

குரங்கு அம்மை நோய் பாதிப்பை, சர்வதேச அளவில் பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவிக்கிறது.

பொது சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, இந்த தொற்றுநோய், குறிப்பிட்ட ஒரு நாடு அல்லது பிராந்தியத்திற்கு மட்டும் பரவக்கூடியதல்ல என்பது தெளிவாகிறது.

மேலும் சமூகப் பரவல் எங்கு நடந்தாலும் உடனடி நடவடிக்கைகளால் கவனிக்கப்பட வேண்டும். இந்த நோயால் சிறிய பாதிப்பு ஏற்படுவதை உலகம் உறுதி செய்வதற்காகவே அறிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையான வலி, பயம், கண் பார்வை இழப்பு மற்றும் உயிரிழப்பு ஆகிய பாதிப்புகள் வரலாற்று ரீதியாக குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் காணப்படுகின்றன.

தற்போதைய சூழலில் சமூக பரவலாக நோய் தொற்றின் வேகம் விரிவடைவதால் இதுவரை காப்பாற்றப்பட்ட குழந்தைகளுக்கு கூட, தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

எலிகள், அணில்கள் மற்றும் வளர்ப்பு செல்லப்பிராணிகள் உட்பட வனவிலங்குகளுக்கு பரவும் ஆபத்து உள்ளது. இது உலகம் முழுவதும் விரிவடையும், இது மனித நோய்த்தொற்றின் தொடர்ச்சியான அபாயத்திற்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.