துப்பரவு தொழிலாளர்கள் 1-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்

பெங்களூரு:

கர்நாடக அரசு துப்புரவு தொழிலாளர்கள் சங்கங்களின் கூட்டு போராட்ட குழு தலைவர் நாராயணா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் மாநகராட்சிகள், நகரசபைகள், புரசபைகள் மற்றும் பட்டண பஞ்சாயத்துகளில் துப்புரவு பணி வெளிஒப்பந்தத்திற்கு (அவுட்சோர்சிங்) வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய முறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் சுரண்டப்படுகிறார்கள். இது ஒரு அடிமை முறையாக உள்ளது. இதை அரசே ஊக்கப்படுத்துவது ஏற்கத்தக்கது அல்ல. அதனால் இந்த வெளிஒப்பந்த முறையை ரத்து செய்ய வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்தோம். அரசு துப்புரவு தொழிலாளர்கைள தரம் பிரித்து வைத்துள்ளது. இதில் ஒரு பிரிவினரை மட்டும் துப்புரவு தொழிலாளர்கள் என்று அரசு சொல்கிறது.

ஆனால் நாங்கள் அனைவரையும் துப்புரவு தொழிலாளர்கள் என்று கருதுகிறோம். அதனால் ஒப்பந்த முறையில் பணியாற்றும் அனைத்து துப்புரவு தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பெண் துப்புரவு தொழிலாளர்களுக்கு பிரசவ விடுமுறை உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 1-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு நாராயணா கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.