"எங்கள் கண்ணதாசன் புகழ் பாடுங்களேன்" – எம்.எஸ்.வி! #AppExclusive

கே.மணிமாறன், திருப்பூர்-2.

”ஒரே நேரத்தில் எம்.ஜி.ஆர்., சிவாஜி என இருபெரும் திலகங்களின் படங்களுக்கு இசை அமைத்தவர் நீங்கள். அந்தச் சமயங்களில் எந்தக் குழப்பமும் பிரச்னையும் வந்தது இல்லையா? தர்மசங்கடத் தருணங்களை எப்படிச் சமாளித்தீர்கள்?”

” ‘நீங்க எம்.ஜி.ஆருக்கு ஒரு மாதிரியும் சிவாஜிக்கு வேற மாதிரியும் இசையமைக்கிறீங்க. ரெண்டும் நல்லாத்தான் இருக்கு. ஆனா, ஏன் இந்த வித்தியாசம்?’னு பலர் என்கிட்டயே கேட்டு இருக்காங்க. நான் அப்படி அவங்களை எப்பவும் பிரிச்சுப் பார்த்து இசையமைச்சது இல்லை. என்கிட்டே இசையமைக்கச் சொல்லி, பாட்டுக்கான சூழ்நிலையைச் சொல்லி படத்தோட இயக்குநரும் தயாரிப்பாளரும்தான் வருவாங்க. சிவாஜி பெரும்பாலும் வரவே மாட்டார். எம்.ஜி.ஆர். வராம இருக்கவே மாட்டார். நான் பொதுவா அந்தந்த ஹீரோ நடிக்கிற பாத்திரம் என்ன… எந்த மாதிரி சூழல்ல பாட்டு வேணும்னு கேட்டு, அதை மனசுல வெச்சுக்கிட்டுதான் இசையமைப்பேன். பாடல் கம்போஸிங், பின்னணி இசையமைக்கிற தேதி, நேரங்கள்ல சின்னச் சின்ன நெருக்கடிகள் வந்திருக்கலாமே தவிர, எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களுக்கு ஒரே சமயத்துல இசையமைக்கிறதுல எனக்கு எந்தக் குழப்பமோ, தர்மசங்கடமோ வந்தது இல்லை.”

M.S.Viswanathan answer Vikatan Readers’ questions!

கி.நிரஞ்சனா, கோயம்புத்தூர்-5.

”கண்ணதாசன் – வாலி – வைரமுத்து ஒப்பிடுங்களேன்?”

”என் மியூஸிக்ல பாட்டு எழுத வந்த அத்தனை பேருமே ஜாம்பவான்கள்தான். அவங்களோட தமிழுக்கு நான் எப்பவும் தலை வணங்குவேன். என் டியூன்தான் ஒஸ்தி… நான் போட்டதுதான் பிரமாதமான இசைனு சொல்ல மாட்டேன். அது ஒரு டீம் வொர்க். அந்த மேதைகள்கூட வேலை பார்த்ததுனாலதான் நான் ஜொலிச்சேன். யாரையும் யாருடனும் ஒப்பிடக் கூடாது. நீங்க கேட்ட மூணு பாடலாசிரியர்களைப் பத்திச் சுருக்கமா சொல்றேன்…

கண்ணதாசன் – இனிமை
வாலி – எளிமை
வைரமுத்து – புதுமை!”

ஆர்.சிவச்சந்திரன், பம்மல்.

‘ ”நான் இறந்த பிறகு என் உடலை எம்.எஸ்.வி-யின் இல்லத்தில் சிறிது நேரம் வைத்துவிட்டுப் பின்பே எடுத்துச் செல்ல வேண்டும்’ என்று சந்திரபாபு சொன்னதாகக் கேள்விப்பட்டு உள்ளேன். உண்மையிலேயே அப்படி அவர் சொன்னாரா? ஆமெனில், அவருடைய அந்த ஆசையை நிறைவேற்றினீர்களா?”

”ஏன் தம்பி பழசையெல்லாம் இப்போ ஞாபகப்படுத்துறீங்க. சந்திரபாபுவை நினைச்சாலே என் மனசு கனத்துப்போகுது.

என் அம்மா நாராயணக் குட்டியை நான் கடவுள் மாதிரி நினைக்கிறவன். அவங்க ஆசீர்வாதம்தான் என்னை இந்த இடத்துல வெச்சிருக்குன்னு நம்புறவன். அம்மாவை வீட்ல எல்லாரும் நாணிக் குட்டினு கூப்பிடுவாங்க. என் அம்மாவைத் தன் அம்மா மாதிரி நினைச்சவன் சந்திரபாபு.

நேரம் கிடைக்கிறப்ப எல்லாம் என் வீட்லயே கிடப்பான். திடீர்னு நடுராத்திரியில வந்து நின்னுட்டு, ‘எனக்கு உப்புமா வேணும், ரவா தோசை வேணும்’னு உரிமையாக் கேட்பான். எனக்கும் அவனுக்கும் அவ்வளவு நட்பு. ‘டேய் விசு… நீ எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் ரொம்ப அருமையா டியூன் போடுறே. எனக்குத்தான் சுமாரா போடுறே’னு சண்டை போடுவான். அவனுக்கு நான் போட்ட பாட்டுல எனக்கு ரொம்பப் பிடிச்சது, ‘பிறக்கும்போதும் அழுகின்றான்… இறக்கும்போதும் அழுகின்றான்’ பாட்டு.

M.S.Viswanathan answer Vikatan Readers’ questions!

இந்தப் பாட்டைப் பத்திச் சொல்றப்ப ஒரு சம்பவத்தைச் சொல்லணும். இந்தியா – பாகிஸ்தான் யுத்த நிதி கொடுக்குறதுக்காக, தமிழ் சினிமா உலகத்தைச் சேர்ந்த பல கலைஞர்கள் சிவாஜி தலைமையில் டெல்லிக்குப் போயிருந்தோம். சந்திரபாபுவும் வந்திருந்தான். அப்போ ஜனாதிபதியா இருந்தவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். தமிழ்நாட்டுல இருந்து வந்திருக்கோம்னு கேள்விப்பட்டதும் எங்களைச் சந்திச்சார் அவர். அப்போ அவர் முன்னால ‘பிறக்கும்போதும் அழுகின்றான்… இறக்கும்போதும் அழுகின்றான்’ பாட்டை சந்திரபாபு பாடிக் காட்டினான். டாக்டர் ராதாகிருஷ்ணன் பாட்டை ரொம்ப ரசிச்சுக் கேட்டுட்டு இருந்தப்ப, இந்தப் படுவா ராஸ்கல் என்ன பண்ணான் தெரியுமா? பாடிக்கிட்டே சர்ருனு தாவிப்போய் அவர் மடில உட்கார்ந்துட்டு, அவர் தாவாங்கட்டையைப் பிடிச்சுக்கிட்டு, ‘நீ பெரிய ஞானஸ்தன்’னு சொல்லிட்டான். நாங்க பதறிப்போயிட்டோம். ஆனா, டாக்டர் ராதாகிருஷ்ணன் சிரிச்சுட்டே, அவனை அணைச்சுக்கிட்டார்.

நீங்க சொன்னது மாதிரி சந்திரபாபு, ‘நான் செத்துப்போனா என்னோட பாடியைக் கொஞ்ச நேரம் விஸ்வநாதன் வீட்டுல வெச்சுட்டுத்தான் தூக்கிட்டுப் போகணும்’னு சொல்லியிருந்தான். அதே மாதிரி, அவன் இறந்தப்ப அவனோட உடம்பை என் வீட்டுக்குக் கொண்டுவந்து கொஞ்ச நேரம் வெச்சிட்டுதான் எடுத்துட்டுப்போனாங்க. அந்த மாதிரியான நண்பனை எல்லாம் இனிமே பார்க்க முடியாதுங்க!”

வித்யாதரன்.கே, தேனி.

”அன்றைய க்ளாஸிக் பாடல்களை ரீமிக்ஸ் என்ற பெயரில் இப்போது நவீன பாணியில் மாற்றுகிறார்களே… அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”

”அதைப் பத்தி என்கிட்டே கேட்காதீங்க. நான் சொல்ல என்ன இருக்கு? முத்து முத்தான நல்ல பாட்டுகளைக் கொலை பண்ணாம அப்படியே விட்டுடுங்கப்பானு எல்லாரையும் கேட்டுக்கிறேன். அவ்வளவுதான் என்னால முடியும்.”

என்.ஆர்.ரஹ்மான், தஞ்சாவூர்.

” ‘அந்த நாள் ஞாபகம் வந்ததே நெஞ்சிலே நண்பனே… நண்பனே’ என உங்கள் இசைஅமைப்பில் ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் வந்த பாடல், அந்த நாளில் ஒரு புதுமையான முயற்சி. ராகமாக இல்லாமல் கிட்டத்தட்ட வசனமாகவே ஒலிக்கும் பாடல் அது. அந்தப் பாடலுக்கான விதை உங்கள் உள்ளத்தில் விழுந்தது எப்படி?”

”ஏவி.எம்.குமரன் சார் ரொம்பவும் இசை ஞானம் உள்ளவர். ‘உயர்ந்த மனிதன்’ படத்துக்கு பாட்டு கம்போஸிங் பண்ண எல்லாரும் உட்கார்ந்து இருந்தோம். அப்போ குமரன் சார் ஒரு இங்கிலீஷ் பாட்டைச் சொல்லி, ‘அதைக் கேட்டுப் பாருங்க’ன்னார். அந்தப் பாட்டைக் கேட்டுட்டு நான் சொன்னேன். ‘சார், நீங்க இங்கிலீஷ் பாட்டை கேட்டுப் பார்க்கச் சொல்றீங்க. ஆனா, இதெல்லாம் நம்மளோட நாட்டுப்புறப் பாட்டுகள்ல நிறைய இருக்கு’னு சொல்லி…

‘கோபாலன் மாடு வந்து
குறுக்கப் படுத்துக்கிச்சாம்
குறுக்க படுத்த மாடு இப்போ

ஆளைத் தேடிக்கிச்சாம்’-னு ஒரு பாட்டைப் பாடிக் காட்டினேன். இப்படியே பேசிட்டே இருக்கிறப்ப… நான் சட்டுனு வசனம் பேசுற ஸ்டைல்லயே, ‘அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே… நண்பனே’னு டியூன் போட்டுக் காட்ட, அது உடனே ஓ.கே. ஆச்சு.”

M.S.Viswanathan answer Vikatan Readers’ questions!

மு.ஆதி, திருநெல்வேலி.

”சினிமாவில் பெரியவங்க, சின்னவங்க வித்தியாசம் இல்லாம எல்லோருடனும் இயல்பா உங்களால் எப்படி இணைந்து செயல்பட முடியுது?”

”எந்த இடத்துலயும் நாம நாமளா இருந்தா யாரோடவும் இணைந்து செயல்பட முடியும். மனிதர்கள் பலருக்குப் பிரச்னை வர்றதே… அவங்கவங்களோட ஈகோவால்தான். எனக்கு ஈகோவே கிடையாது. ‘மெல்லத் திறந்தது கதவு’ படத்துல இளைய ராஜாவோடு சேர்ந்து இசையமைச்சேன். இப்போ அவரோட மகன் யுவன்ஷங்கர் ராஜாவோடு சேர்ந்து ‘தில்லுமுல்லு’ பார்ட்-2 படத்துல இசையமைக்கிறேன். எல்லாம் ஆண்டவன் அனுக்கிரஹம்.”

மாலா கோபாலன், திருவாரூர்.

”அலுவலகத்தில் பியூனாக இருந்தாலும் அவரை நீங்கள், ‘ஆபீஸ் பையன் அவர்களே’னு மரியாதை கொடுத்துதான் அழைப்பீர்கள் என்று என் நண்பர் சொன்னார். அப்படியா?”

”ஆமாங்க! ‘ஆபீஸ் பையன் அண்ணே’னு கூப்பிடுவேன். சினிமாவில் நான் பார்த்த முதல் வேலையே ஆபீஸ் பையன் வேலைதான். எட்டு வயசுல இருந்து பல கஷ்டங்களைச் சந்திச்சு, முட்டி மோதித்தான் சினிமாவில் எனக்குன்னு ஓர் இடத்தைப் பிடிச்சேன். ஆபீஸ் பையனா வேலை பார்த்தப்ப, எல்லாவிதமான மனிதர்களிடமும் சகஜமாகப் பழகி அவங்களோட சுகதுக்கங்களில் பங்கெடுத்துக்கிட்டதால், எல்லாரையும் மதிக்கணும்கிற பண்பு எனக்கு இயல்பாவே வந்திருச்சு. எம்.கே.தியாகராஜ பாகவதர், எம்.எம்.மாரியப்பா, எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன்கிட்ட எல்லாம் நெருங்கிப் பழகிட்டு, இந்தப் பண்புகூட இல்லைன்னா, அப்புறம் என்ன அர்த்தம்? யாரா இருந்தாலும், எந்த உயரத்தில் இருந்தாலும் மனிதர்களை மதிக்கணும். அதுதான் முக்கியம்!”

M.S.Viswanathan answer Vikatan Readers’ questions!

மந்திரியப்பன், கீழ்க்கட்டளை.

”இப்போதைய இளைய தலைமுறை இசையமைப்பாளர்களைப் பற்றி உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்?”

”எங்க காலம் மாதிரி இல்லை இப்போ.தொழில்நுட்பத்துல தமிழ் சினிமா எங்கேயோ உயரத்துல இருக்கு. நான், இளையராஜா, ரஹ்மான் மட்டும் இல்ல… எங்க பாதையில நிறையப் பேர் தொடர்ந்து வந்திருக்காங்க. வித்யாசாகர், இளையராஜாவோட மகன் யுவன்ஷங்கர் ராஜா, தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவா, ஹாரிஸ் ஜெயராஜ், ஜி.வி.பிரகாஷ், டி.இமான், விஜய் ஆண்டனினு எல்லாருமே பிரமாதமா மியூஸிக் போடுறாங்க. சின்னவங்க, பெரியவங்கன்னு இல்லீங்க. இசையைப் பொறுத்தவரை மக்கள் விரும்பிக் கேட்கணும்… அவ்வளவுதான். இளைய தலைமுறை பசங்க மக்கள் விரும்பிக் கேட்கிற மாதிரி இசையமைக்கிறாங்க.”

கி.மனோகரன், பொள்ளாச்சி.

”நீங்க இசையமைக்க ரொம்பவும் கஷ்டப்பட்ட பாட்டு எது? ஏன்?”

” ‘அவன்தான் மனிதன்’ படத்துல ஒரு பாட்டு. பாடலின் சூழ்நிலைக்கு கண்ணதாசன் பிரமாதமாப் பாட்டு வரிகளை எழுதிட்டாரு. கவியரசரோட அந்த வரிகளுக்கு நான் பல டியூன் போடுறேன். எனக்கே திருப்தி இல்லை. ரொம்பக் கவலையாப்போச்சு. கடைசியில எனக்குப் பிடிச்ச மாதிரி ஒரு டியூன் அமைஞ்சது. அந்தப் பாட்டு… ‘ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா’! அந்த டியூன் ரசிகர்களுக்கும் ரொம்பப் பிடிச்சுப்போனது என்னோட பாக்கியம்.

இந்த இடத்துல கவியரசர் பாட்டு எழுதி ரொம்பவும் குறுகிய நேரத்துல நான் டியூன் போட்ட பாட்டு பத்தியும் சொல்லிடுறேன். ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்துல வர்ற ‘முத்தான முத்தல்லவோ’ பாட்டுக்கான மெட்டை நான் போடப் போட, ஓடுற காரிலேயே கவிஞர் அந்த மெட்டுக்கான வரிகளைச் சொல்லிக்கொண்டு வர, நாங்க அந்த மெட்டுக்காக எடுத்துக்கிட்டது மொத்தம் மூணே நிமிஷம்தான்!”

M.S.Viswanathan answer Vikatan Readers’ questions!

ரா.பாலகுமாரன், சென்னை-63.

”நீங்கள் சில படங்களில் நடித்துள்ளீர்கள். உண்மையில் நடிகராக வேண்டும் என்ற ஆசையில்தான் திரைத் துறைக்கு வந்தீர்களா?”

”சின்ன வயசுல என் குருநாதர் நீலகண்ட பாகவதரிடம் பாட்டுப் பயிற்சிதான் எடுத்துக்கிட்டேன். அவர் நாடகங்களும் எழுதுவார்.

அப்போ கேரளா கண்ணணூர்ல இருந்த சிறைக் கைதிகளின் பொழுதுபோக்குக்காக ஹரிச்சந்திரா நாடகம் போட்டார். அந்த நாடகத்துல அவர் என்னை லோகிதாசனா நடிக்கவெச்சார். அந்த நாடகத்தைப் பார்த்த மாவட்ட கலெக்டர், ‘இந்தப் பையன் சினிமாவுல சேர்ந்தா பிரமாதமா வருவான்’னு என்னைப் பாராட்டினார். அதைக் கேட்ட துல இருந்துதான் எனக்கு சினிமா கிறுக்குப் பிடிச்சுருச்சுனு சொல்லணும். எப்படியாவது சினிமாவுல சேர்ந்துடணும்னு முடிவுபண்ணிட்டேன். அப்புறம் என் மாமா மூலம் திருப்பூர் ஜூபிடர் பிக்சர்ஸ்ல ஆபீஸ் பையனா வேலைக்குச் சேர்ந்தேன். அங்கே அப்போ ‘கண்ணகி’ பட வேலைகள் நடந்துட்டு இருந்தது. அந்தப் படத்தில் பாலமுருகன் வேஷத்தில் நடித்தேன். அப்புறம், ‘குபேர குசலா’ படத்தில் ஒரு வேஷம் கிடைச்சது.

ஆபீஸ் பையன் வேலை பார்க்கிறப்ப ஸ்டுடியோல இருக்கிற ஆர்மோனியப் பெட்டியைத் துடைக்கிற சாக்குல அதை ஆசையாத் தடவித் தடவிப் பார்ப்பேன். இந்த நேரத்துலதான் டி.எஸ்.பாலையா அண்ணன் பழக்கம் ஏற்பட்டுச்சு. அவர் என்னைத் தன்னோட நாடக ட்ரூப்புல சேர்த்துக்கிட்டார். அவரோட பல நாடகங்கள்ல சின்னச் சின்ன வேஷங்கள்ல நடிச்சேன். பிறகு, சினிமாவுல பாலையா அண்ணன் பிஸியாகிட்டதால், முன்னே மாதிரி அவரால நாடகங்கள் நடத்த முடியலை. நாடகங்கள் இல்லாததால வறுமையில் ரொம்பக் கஷ்டப்பட்டேன். மறுபடியும் ஜூபிடர் பிக்சர்ஸுக்கே திரும்பினேன். அங்கேதான் என் வாழ்க்கைல ஒளி விளக்கு ஏத்தி வெச்ச இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவைச் சந்திச்சேன். அவர் என்னைத் தன்னோட உதவியாளரா சேர்த்துக்கிட்டார். நடிப்பு ஆசையை உதறிட்டு, நான் இசை பக்கம் திரும்பினது அப்போதுதான்.”

வி.ஆர்.கிருத்திகா, திருத்தங்கல்.

”நீங்கள் இசையமைத்ததில் டாப் 10 பாடல்களைப் பட்டியல் இடுங்களேன்?”

” 1. எங்கே நிம்மதி… (புதிய பறவை)

2. யார் அந்த நிலவு… (சாந்தி)

3. தெய்வமே… தெய்வமே (தெய்வ மகன்)

4. தேவனே என்னைப் பாருங்கள்… (ஞானஒளி)

5. தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு… (அவள் ஒரு தொடர்கதை)

6. ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல். (அபூர்வ ராகங்கள்)

7. சிப்பி இருக்குது முத்து இருக்குது… (வறுமையின் நிறம் சிவப்பு)

8. அல்லா… அல்லா… (முகமது பின் துக்ளக்)

9. எதற்கும் ஒரு காலம் உண்டு… (சிவகாமியின் செல்வன்)

10. நிலவு ஒரு பெண்ணாகி… (உலகம் சுற்றும் வாலிபன்).”

M.S.Viswanathan answer Vikatan Readers’ questions!

தலத்தெரு பாலு, காரைக்கால்.

”எம்.எஸ்.வி. என்கிற உங்கள் பெயரிலேயே ஏதோ சிறப்பு இருப்பதாகக் கேள்விப்பட்டு இருக்கிறேன். அது என்ன சார்?”

” ‘மனையங்கத்து சுப்பிரமணியன் விஸ்வநாதன்’ என்பதுதான் எம்.எஸ்.வி.

நான் பிறந்த கேரளாவில் ஒரு வழக்கம் உண்டு. ஒவ்வொரு குடும்பத்துக்கும் என்று ஒரு பட்டப் பெயர் இருக்கும். அந்த வழக்கப்படி எங்கள் குடும்பத்துக்கு ‘மனையங்கத்து’ என்பது பட்டப் பெயர். ஆக, என் பெயரின் ‘எம்’ என்பது ‘மனையங்கத்’தையும் ‘எஸ்’ என் தந்தை சுப்பிரமணியனையும் குறிக்கும்.

இன்னொரு விஷயமும் உண்டு… 1964-ல் நான் முதன்முதலில் 7,500 ரூபாய் கொடுத்து கார் வாங்கினேன். அந்த காருக்குக் கிடைத்த பதிவு எண் என்ன தெரியுமா? MSV 5052 என்பதாகும். இன்றும் அந்தக் காரை நான் மாற்றாமல் என்னோடு வைத்திருக்கிறேன்!”

யு.ஆதி, முக்கூடல்.

”இதுவரை நீங்கள் வெளியில் சொல்லாத ரகசியம் ஒன்று?”

”ரகசியம்னு எதுவும் கிடையாதுங்க. என்னோடு சினிமாவில் வேலை பார்த்த எல்லாருக்கும் என்னோட எல்லா உண்மையும் தெரியும். ஆனா, பரவலா பலருக்கு என்னைப் பத்தித் தெரியாத ஒரு செய்தி… எனக்கு டான்ஸ் ஆடத் தெரியும். ஆமாங்க… சினிமாவில் நாம் என்னவாகப் போகிறோம்னே தெரியாம, நாடக நடிகனா, சினிமா கம்பெனி ஆபீஸ் பையனா, பலருக்கு அசிஸ்டென்டா இருந்தப்ப… இதையும்தான் கத்துக்குவோம்னு வழுவூர் ராமையாப்பிள்ளைகிட்ட பரதநாட்டியம் கத்துக்கிட்டேன். ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிச்ச ‘குபேர குசலா’, ‘மகாமாயா’, ‘கண்ணகி’ ஆகிய படங்கள்ல பெண் வேஷத்துல நான் குரூப் டான்ஸ் ஆடி இருக்கேன். இதெல்லாம் பலருக்குத் தெரியாது.”

M.S.Viswanathan answer Vikatan Readers’ questions!

கு.முத்து, திருவாரூர்.

”எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெய்சங்கர் என நடிகர்களுக்கு ஏற்ப தன் குரலை மாற்றிப் பாடுவதில் வல்லவர் டி.எம்.எஸ். உங்கள் இசையமைப்பில் நீங்கள் அவரை அப்படிப் பாடச் சொல்லிக் கேட்பீர் களா? அல்லது அவரே அப்படிப் பாடுவாரா?”

”என்னோட எட்டு வயசுல இருந்து டி.எம்.எஸ். எனக்குப் பழக்கம். கோயம்புத்தூர்ல ஜூபிடர் ஸ்டுடியோவுல நான் மாசம் 15 ரூபா சம்பளம் வாங்கினப்ப, அவர் ஒரு பாட்டுக்கு 250 ரூபா வாங்கினவர். பெரிய வித்தைக்காரர். நடிகர்களை மனசுல வெச்சுக் கிட்டுப் பாட மாட்டார். போட்டுக் கொடுக்கிற டியூனுக்கு ஏத்த மாதிரி பிரமாதமாப் பாடுவார். அப்படிப் பாடுறப்ப ஒவ்வொரு நடிகருக்கும் ஒவ்வொரு மாதிரி பாடுறது மாதிரியே இருக்கும். அதுதான் அவரோட ஸ்பெஷல்!”

ரகோத்தமன், தாராபுரம்.

”கவிஞர் வாலியைப் பற்றிச் சொல்லுங்களேன்?”

”வாலிப வரிகளின் நிரந்தர ஊற்றாக இருக்கும் அவரைப் பத்தி நான் சொல்ல என்ன இருக்கு? மெட்டு போட்ட அடுத்த நொடியே அருவியாப் பாட்டைக் கொட்டுவார். வார்த்தைகள் அவர்கிட்டே சேவகம் செய்யும். அவர் ஒரு தீர்க்கதரிசி. ‘நீ பெரிய ஆளா வராமப் போக மாட்டே விசு’னு சொல்லிக்கிட்டே இருப்பார். அவர் வாய் முகூர்த்தம் பலிச்சிடுச்சு. எனக்குத் தெரிஞ்சு நன்றி உணர்ச்சிக்குப் பெரிய உதாரணம் கவிஞர் வாலிதான்!”

வி.ராம்ஜி, பொன்மலை.

”உங்கள் பாணியிலேயே கேட்கிறேன்… மேட்டருக்கு மீட்டரா? மீட்டருக்கு மேட்டரா? இரண்டில் எது சிறந்தது?”

”சினிமா இசைங்கிறது ஒரு டீம் வொர்க். ஏற்கெனவே நான் சொல்லியிருக்கேன். எனக்கு ஈகோங்கிறதே கிடையாது. கம்போஸிங்ல உட்கார்ந்து பாட்டெழுதி (மேட்டர்) மெட்டு போடணுமா? இல்ல மெட்டு (மீட்டர்) போட்டுப் பாட்டு எழுதணுமானு டிஸ்கஸ் பண்ணுவோம். பெரும்பாலும் பாடல் வர்ற சிச்சுவேஷனைப் பொறுத்தது இது. பாட்டெழுதறதுக்கு கண்ணதாசன் வர்றப்பயே… ‘ஏண்டா விசு… சந்தத்துக்கா? சொந்தத்துக்கா?’னு கேட்டுக்கிட்டேதான் வந்து உட்கார்வார். ‘யோவ்! வந்ததுக்கு ஏதாச்சும் எழுதய்யா’னு நான் தமாஷா ஒரு அதட்டல் போடுவேன். அப்புறம் பாட்டு கட்டுவோம்!”

கே.கலையரசன், கிடாரங்கொண்டான்.

”இந்தக் காலத்தில் சில திரைப்படப் பாடல்களில் ‘காப்பி’ நெடி தூக்கலாக இருக்கிறது. ஆனால், அந்தக் காலத்திலேயே எம்.ஜி.ஆர். உங்களிடம் சில ரெக்கார்டுகளைக் கொடுத்து, ‘இது மாதிரி இசையமைத்துக் கொடுங்க’னு சொன்னாராமே… உண்மையா?”

” ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்துக்காக லொகேஷன் பார்க்க வெளிநாடுகளுக்குப் போன எம்.ஜி.ஆர்., ஒரு மூட்டை நிறைய ரிக்கார்டுகளும் கேசட்டுகளும் கொண்டுவந்து கொடுத்து, ‘விசு… இதை எல்லாம் கேட்டுப்பார். ஒரு ஐடியா கிடைக்கும்’னார். நான் அதை எல்லாம் ஒரு ஓரத்தில் ஒதுக்கிவெச்சுட்டு, ‘அண்ணே… நான் மெட்டுப் போட்டுத் தர்றேன். அதைக் கேட்டுட்டு அப்புறம் சொல்லுங்க’னு சொல்லி, கடகடனு நிறைய மெட்டு போட்டுக் கொடுத்தேன். அதையெல்லாம் கேட்டதுமே எம்.ஜி.ஆர். என்னைக் கட்டிப்புடிச்சுக்கிட்டார். அது எல்லாமே சூப்பர் ஹிட் மெட்டு ஆனதுதான் உங்களுக்கே தெரியுமே!”

M.S.Viswanathan answer Vikatan Readers’ questions!

பா.கீர்த்தனா, சென்னை-63.

”ஜெயலலிதா உங்களுக்கு ஜனாதிபதி விருதுக்கு சிபாரிசு செய்ய முன்வந்தும் நீங்கள் மறுத்தது ஏன்?”

”முதல்வர் அம்மா என்கிட்டேயே, ‘உங்களுக்கு ஜனாதிபதி விருது கொடுக்க சிபாரிசு செய்யப்போறேன்’னு சொன்னாங்க. என் இசை மேல அவங்களுக்கு இருக்கிற மதிப்பின் காரணமா அப்படிச் சொன்னாங்க. ‘இல்லம்மா… உங்களுக்கு வேற நிறைய வேலை இருக்கும். என்னால எதுக்கு உங்களுக்குச் சங்கடம்? வேண்டாம்மா. ஒவ்வொரு ரசிகரும் தன் மனசுல எனக்குக் கொடுத்துருக்கிற இடத்தைவிடவா விருதுகளும் பட்டங்களும் எனக்குச் சந்தோஷம் கொடுத்துடப் போகுது… நீங்க சொன்னதே போதும்மா’னு சொல்லிட்டேன். அது உண்மைதானே!”

க.சந்திரன், திருவண்ணாமலை.

” ‘அன்னக்கிளி’ படத்தின் பாடல்கள் வெளிவந்தப்ப, அதைக் கேட்டதும் உங்க மனசுல என்ன நினைப்பு ஓடுச்சு?”

” சிவகுமார் நடிச்ச பல படங்களுக்கு நான் மியூஸிக் போட்டிருக்கேன். ‘அன்னக்கிளி’ பட வேலைகள் ஆரம்பிச்சப்பவே புது மியூஸிக் டைரக்டரை அறிமுகப்படுத்துறாங்கனு பேசிக்கிட்டாங்க. படத்தின் பாடல்களைக் கேட்டுட்டு, ‘ரொம்பப் பிரமாதமா… இருக்கே’னு நினைச்சேன். அப்போ எங்கே போனாலும் இதே பேச்சாதான் இருந்துச்சு. தம்பி இளையராஜாவைப் பாராட்டினேன். ‘அன்னக்கிளி’ வர்றதுக்கு முன்னயே அவரை எனக்குத் தெரியும். என் ட்ரூப்புல கீபோர்டு வாசிச்சிருக்கார். அற்புதமான மேதை. இன்னொரு விஷயம், யாரையும் நான் பொறாமையோட பார்த்தது இல்லை. ஆனா, போட்டி இருக்கும்.”

M.S.Viswanathan answer Vikatan Readers’ questions!

தீன் முகம்மது, பூதமங்கலம்.

”நீங்கள் வாய்விட்டு அழுத சம்பவம் என்ன?”

”நான் கோல்டன் ஸ்டுடியோவுல ஒரு படத்துக்கு பாட்டு கம்போஸிங்ல இருந்தேன். அப்போ மெஜஸ்டிக் ஸ்டுடியோ ரெங்கசாமி கார்ல இருந்து இறங்கி வேக வேகமா வந்து, ‘கண்ணதாசன் காலமாயிட்டார்’னு சொன்னார். அதைக் கேட்டதுமே எனக்கு ஈரக்குலையே நடுங்கிப்போச்சு. கண்ணீர் முட்டிக்கிட்டு வந்திருச்சு. என்ன செய்யிறதுன்னே தெரியலை. அழுது அழுது கண்ணு சிவந்துபோயிருச்சு. நெஞ்சு படபடப்பை அடக்கிட்டு கவிஞர் வீட்டுக்கு ஓடினேன். அங்கே போனா கண்ணதாசன் சோபாவுல ஜம்முனு உட்கார்ந்திருக்கார். ‘டேய் விசு, நான் செத்துப்போயிட்டா நீ எப்படி அழுவேனு பார்க்க ஆசையா இருந்தது. அதான் அப்படி சொல்லச் சொன்னேன்’ னார். அதுதாங்க நான் என்னை மறந்து விம்மி வெடிச்சு அழுத தருணம்!”

அனுசுயா கோவிந்தராஜன், தஞ்சாவூர்.

”நீங்க புகழின் உச்சத்தில் இருந்த நேரத்தில் உங்களுக்கு நிகராக பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருந்த இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனைப் பற்றி உங்கள் நினைவுகள் என்ன?”

”ரொம்பப் பெரிய மேதைங்க அவர். நான் பெரிசா மதிக்கிற மியூஸிக் டைரக்டர்ல அவரும் ஒருத்தர். அப்போ நான் மியூஸிக் போட்ட ஒரு படத்தோட பாட்டெல்லாம் ஹிட் ஆச்சுன்னா… அடுத்ததா அவர் மியூஸிக் போட்ட பாடல்களும் ஹிட் ஆகும். ரெண்டு பேருமே பீக்ல இருந்தோம். முதன்முதலா கோரஸ் பாடுறதுக்கு நான் சான்ஸ் கேட்டுப் போனது கே.வி.மகாதேவன்கிட்டதான். என்னை அவர் சேர்த்துக்கலை. ஆனா, ‘ஜூபிடர் பிக்சர்ஸுக்கே மறுபடியும் போய்ச் சேரு’ன்னு சொல்லி… எனக்கு வேட்டி, சட்டைலாம் எடுத்துக் கொடுத்து, கையில் ரெண்டு ரூபாயும் தந்து என்னை அனுப்பிவெச்சது அவர்தான். நான் கோயம்புத்தூர் ஜூபிடர் பிக்சர் ஸுக்குப் போய், எஸ்.எம்.சுப்பையா நாயுடுகிட்ட அசிஸ்டென்ட்டா சேர்ந்தேன். பல பேர் என்னை வழிப்படுத்தி இருக்காங்க. அதில் கே.வி.மகா தேவன் அவர்களுக்கு முக்கியமான இடம் இருக்கு!”

M.S.Viswanathan answer Vikatan Readers’ questions!

ஆ.பிரணவ், முக்கூடல்.

”இப்போதும் நீங்கள் அடிக்கடி முணுமுணுக் கும் பாடல் எது… ஏன்?”

”ஏன்னு சொல்லத் தெரியலை. ஆனா, ‘தேவனே என்னைப் பாருங்கள்…’ பாட்டைத்தான் இப்பெல்லாம் அடிக்கடி முணுமுணுத்துட்டு இருக்கேன்.”

கே.ஆர்.முத்தையா, திருச்சி-4.

”கமல், ரஜினி இருவரும் உங்களிடம் எப்படிப் பழகுவார்கள்?”

”எனக்கு எல்லா வயசுலயும் நண்பர்கள் இருக்காங்க. கமல் என் குட்டி நண்பன். என் குடும்பத்தில் பிறக்காத பிள்ளை. முன்னாடி அடிக்கடி என் வீட்டுக்கு வருவார். அப்பல்லாம், ‘எனக்கு நல்லா பாட வரும். எனக்கு உங்க மியூஸிக்ல பாடுறதுக்கு சான்ஸ் கொடுங்களேன்’னு கேட்டுட்டே இருப்பார். என்னமோ தெரியலை என் மியூஸிக்ல அவரைப் பாட வைக்கணும்னு எனக்குத் தோணவே இல்லை.

ரஜினி என்னை எங்கே பார்த்தாலும், அவர் வீட்டுல உள்ள ஒரு பெரிய மனிதரை வணங்குற மாதிரி பணிவா வணங்குவார். ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘தில்லுமுல்லு’ படங்கள்ல அவருக்காக நான் போட்ட பாட்டைக் கேட்டுட்டு, ஓடி வந்து என்னைக் கட்டிப்புடிச்சிக்கிட்டாரு. இப்பவும் எங்கேயாச்சும் பார்த்தா, ‘ராகங்கள் பதினாறு உருவான வரலாறு… நான் பாடும்போது அறிவாயம்மா…’ பாட்டை வாய்விட்டு முணுமுணுப்பார். அன்பான மனுஷன்!”

ப.ராணி, நாகர்கோவில்.

”திருநீறு, சந்தனம், குங்குமம் திவ்யமா மணக்குது உங்க நெத்தியில. நீங்க எப்படி ‘அல்லா… அல்லா’னு பாட்டுப் பாடினீங்க?”

”அல்லா, இயேசு, கிருஷ்ணர் எல்லாருமே எப்போதும் நல்லவங்களுக்குப் பக்கத்துலேயே இருப்பாங்க. ‘முகமது பின் துக்ளக்’ படத்துல ‘அல்லா… அல்லா…’ பாட்டை நான் நாகூர் ஹனீபாவைப் பாட வைக்கணுங்கிற முடிவோடதான் இருந்தேன். அவர் குரல்தான் அந்தப் பாட்டுக்குப் பொருத்தமான குரல்னு நிச்சயமா நம்பினேன். ஆனா, சோ அந்தப் பாட்டை நான்தான் பாடணும்னு ஒரே பிடிவாதமா இருந்தாரு. நான் முடியவே முடியாதுன்னு சொல்லிட்டேன். ‘சரி… யாரையெல்லாம் நீ பாட வைக்கணும்னு விரும்புறியோ அவங்க பேரோட, உன் பேரையும் சீட்டு எழுதிப் போட்டுக் குலுக்கி எடுப்போம்’னார் சோ. அது மாதிரியே குலுக்கிப் போட்டு எடுத்தா, என் பேர் எழுதுன சீட்டுதான் வந்துச்சு. ‘சரி… ஆண்டவன் சித்தம் அதுதான்போல’னு நானும் பாடினேன். அந்தப் பாட்டு வெளியாகி பட்டிதொட்டி லாம் பிரபலமான பிறகு, சோ ஒரு உண்மையைச் சொன்னார். அது… சீட்டு எழுதுனப்ப எல்லா சீட்டுலயுமே என் பேரைத்தான் எழுதிவெச்சிருக்கார் அந்த மனுஷன்!”

டி.ராகுல், தோப்பூர்.

”கவியரசு கண்ணதாசன் பயங்கர பிடிவாதக்காரராமே… அப்படியா?”

”பிடிவாதம்கிறது பெரிய வார்த்தை… கொண்ட கொள்கைல உறுதியா இருப்பார். அந்தக் கொள்கைக்குச் சரியான நியாயமும் வெச்சிருப்பார். ‘யாரை நம்பி நான் பொறந்தேன்… போங்கடா போங்க; என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க…’ பாடல் பதிவு. பாடல் வரிகளைப் படிச்சுட்டு கவியரசுகிட்ட நான் சொன்னேன், ‘என்ன கவிஞரே… வாடா போடானு மரியாதை இல்லாம எழுதியிருக்கீங்க. இதே மாதிரிதான், ‘போனால் போகட்டும் போடா’ன்னும் எழுதி இருந்தீங்க. இதெல்லாம் நல்லாவா இருக்கு?’ உடனே கண்ணதாசன் பளிச்னு சொன்னாரு, ‘டேய்… நீ விஜயவாடாங்கிற ஊரைக்கூட ‘விஜயவாங்க’னு சொல்றவன். நான் எழுதறதுக்கு மெட்டு போடுறதுதான் உன் வேலை. அதை மட்டும் ஒழுங்கா பார்த்துக்க.. போதும்’னு பட்டுனு சொல்லிட்டார். அதுக்கு அப்புறம் நான் எதுவும் பேச முடியுமா என்ன? அவரோட பிடிவாதம்லாம் இப்படித்தான் இருக்கும்.”

M.S.Viswanathan answer Vikatan Readers’ questions!

லதா ராமகிருஷ்ணன், திருச்சி-9.

”சமீபத்தில் வெளியானதில் நீங்கள் மிகவும் ரசிச்ச தமிழ்ப் பாட்டு எது?”

”ஒரு பாட்டு இல்ல… சில பாடல்களைச் சொல்லலாம். தம்பி இளையராஜா இசையமைச்ச ‘நீதானே பொன் வசந்தம்’, ஏ.ஆர்.ரஹ்மான் இசைஅமைச்ச ‘விண்ணைத் தாண்டி வருவாயா’… படப் பாடல்கள் எல்லாம் கேட்குறதுக்கு ரொம்ப இனிமையா இருந்துச்சு. புதுசாவும் இருந்துச்சு!”

வி.மாலி, ஆடுதுறை.

”உங்களைப் பத்தி ஒரு ரகசியம் கேள்விப்பட்டேனே… நீங்க குழந்தையா இருக்கும்போது உங்க அம்மாவுக்கு உங்களைப் பிடிக்கலையாம். உங்க தாத்தாதான் இப்ப நீங்க உயிரோட இருக்கக் காரணமாம். இது உண்மையா?”

”திருச்சியில் என் அப்பா ஜெயில் வார்டனா இருந்தார். எனக்கு நாலு வயசா இருந்தப்போ, திடீர்னு அப்பாவுக்கு சீக்கு வந்து இறந்துபோயிட்டார். குடும்பமே சோகத்தில் மூழ்கிருச்சு. தொடர்ந்து சில நாட்கள்லயே அடுத்த இடியா என் தங்கச்சி வேசம்மாவும் இறந்துபோயிட்டா. அம்மா தனி ஆளா என்னை வெச்சுக்கிட்டு கஷ்டப்பட்டுட்டு இருந்தாங்க. அப்போ அக்கம்பக்கத்துல இருந்தவங்க, ‘அப்பனையும் தின்னுட்டான்… தங்கச்சியையும் முழுங்கிட்டான்’னு என்னைத் திட்டித் தீர்த்துருக்காங்க. ‘புருஷன் செத்துப்போயிட்டாரு… புள்ளையையும் ஊரார் கரிச்சுக்கொட்டுறாங்களே’னு மன சொடிஞ்சுபோன அம்மா, ஒரு நாள் அதிகாலை மூணுமணிக்கு திருச்சிலேர்ந்து புதுக்கோட்டை போற ரோட்ல இருந்த ஒரு குளத்துல என்னைத் தள்ளிவிட்டுட்டு தானும் செத்துப் போகப் பார்த்திருக்காங்க. அந்த நேரத்துல வீட்ல மகளைக் காணோம்னு தாத்தா கிருஷ்ணன் நாயர் தேடிக் கிட்டு வந்து, தற்கொலை பண்ணிக்க இருந்த அம்மாவையும் என்னையும் காப்பாத்திட்டார். ஆமா… நீங்க கேள்விப்பட்ட மாதிரி நான் இன்னைக்கு உயிரோட இருக்கக் காரணம், என் தாத்தா கிருஷ்ணன் நாயர்தான்!”

வி.பிரகதி, தூத்துக்குடி.

”தமிழில் இப்போது வரும் குத்துப் பாடல் களைக் கேட்கும்போது என்ன நினைப்பீர்கள்?”

”சினிமாவில் குத்துப் பாட்டுங்கிறது காலம் காலமா இருந்துட்டு வர்ற விஷயம் தான். இரண்டரை மணி நேர அலுப்புத் தெரியாம மக்களை சினிமா பார்க்க வைக்கிற உத்தி அது. அதுல முக்கியமாகவனிக்க வேண்டியது குத்துப் பாட்டின் வரிகளைத்தான். கண்ணியமா… யாரையும்புண்படுத்தாம எல்லாரும் ரசிக்கிற மாதிரி வரிகள் இருக்கணும். ஆனா, இப்ப வர்ற குத்துப் பாடல்களில் வருகிற வரிகள் எல்லாம் எப்படி இருக்குனு நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியது இல்லை. அந்தக் காலத்துல நாங்க போடாத குத்துப் பாட்டா? என்ன, அதை அப்ப டப்பாங்குத்துனு சொல்வாங்க. ‘என்னடி ராக்கம்மா…’, ‘எலந் தப் பழம்… எலந்தப் பழம்…’ பாட்டெல்லாம் இந்தத் தலைமுறைக்கும் தெரிஞ்ச டாப் டப்பாங்குத்து ஆச்சே. ஆனா, அந்தப் பாட்டெல்லாம் கேட்கிறவங்க காதைக் கூசவைக்காது.”

M.S.Viswanathan answer Vikatan Readers’ questions!

வி.கேசவன், மயிலாடுதுறை.

”உங்கள் இசையமைப்பில் ஜெயலலிதாவைப் பாடவைத்த அனுபவத்தைச் சொல்லுங்களேன்?”

”எம்.ஜி.ஆர்… என்கிட்டே அடிக்கடி ஒரு வேண்டுகோள் வைப்பார். ‘நம்ம அம்மு நல்லா பாடுது. அதுக்கு இனிமையான குரல். உன் மியூஸிக்ல அம்முவுக்கு ஒரு வாய்ப்பு கொடு’னு கேட்டுட்டே இருப்பார். அது என்னமோ தெரியலை… நடிகர்கள், நடிகைகள், கவிஞர்கள் இவங்களை எல்லாம் பாடவைக்கணும்னு எனக்குத் தோணவே தோணாது. என்னைச் சுத்திலும் பிரமாதமா பாடுற பின்னணிப் பாடகர்கள், பாடகிகள் இருந்ததும் அதுக்குக் காரணம். எம்.ஜி.ஆர். பார்க்கும்போது எல்லாம் கேட்டுட்டே இருந்ததால, முக்தா சீனிவாசன் தயாரிச்ச ‘சூரியகாந்தி’ படத்துல ‘ஓ மேரா… தில்ரூபா…’ பாட்டைப் பாடுற வாய்ப்பை ஜெயலலிதா அம்மாவுக்குத் தந்தேன். டி.எம்.எஸ்ஸோடு சேர்ந்து பிரமாதமாப் பாடியிருப்பாங்க. அந்தப் பாட்டை ரிக்கார்டிங் குக்கு முன்னால ஒரே ஒரு தடவைதான் அவங்களுக்குப் பாடிக் காட்டினேன். சட்டுனு புடிச்சிக்கிட்டாங்க. கற்பூரப் புத்தி!”

ஜி.காசிநாதன், கும்பகோணம்.

”நீங்க இசையமைத்த முதல் பாட்டுக்கு உங்க பேர் வரலையாமே?”

”ஆமாங்க. ‘வீர அபிமன்யு’ங்கிற படம். அந்தப் படத்துக்கு எஸ்.எம்.சுப்பையா நாயுடுதான் மியூஸிக். நான் அப்ப அவர்கிட்ட வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன். என்னோடு ஜி.கே.வெங்கடேஷ், சி.ஆர்.கோபால கிருஷ் ணன் போன்றவங்கல்லாம் சேர்ந்து வேலை பார்த்தாங்க. ‘புது வசந்தமாமே வாழ்விலே…’ என்கிற பாட்டுக்கு ஏகப்பட்ட டியூன் போட்டாரு எஸ்.எம்.சுப் பையா நாயுடு. ஆனா, எதுவுமே பொருத்தமா அமையலை. ஒரு நாள் மத்தியானம் யாரும் இல்லாதப்ப நான் அந்தப் பாட்டுக்கு ஒரு டியூன் போட் டேன். எனக்கு என்னவோ கேட்டதுமே அந்த டியூன் பிடிச்சுப்போச்சு. நான் இதை யார்கிட்டயும் சொல்லலை. ஆனா, நண்பர்கள் விஷயத்தை சுப்பையா நாயுடுகிட்ட போய் சொல்லி இருக்காங்க. அவர் டியூன் கேட்டுட்டு சந்தோஷப் பட்டார். நான் போட்ட டியூனி லேயே அந்தப் பாட்டு பதிவானாலும் எஸ்.எம்.சுப்பையா நாயுடு பேர்லதான் படத்துல வந்துச்சு.

பல நாள் கழிச்சு ஜூபிடர் பிக்சர்ஸ் முதலாளிகிட்ட என்னை அழைச்சுட்டுப் போயி, ‘வீர அபிமன்யு படத்துல ‘புது வசந்தமாமே வாழ்விலே…’ பாட்டுக்கு மெட்டுப் போட்டது நான் இல்லை. இதோ இந்த விஸ்வநாதன்தான். இவனுக்கு உங்க கம்பெனியில ஒரு சான்ஸ் கொடுங்க’னு சொல்லி, எனக்கு வாழ்க்கையில முதல் கதவைத் திறந்துவெச்சவர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு. எனக்கு நல்ல வாழ்க்கை அமைச்சுக் கொடுப்பதற்காகத்தான் அந்த உண்மையைச் சமயம் பார்த்துச் சொல்றதுக்காக, அவர் பொறுமையாக் காத்திருந்தார்னு எனக்கு அப்போதான் புரிஞ்சது!”

M.S.Viswanathan answer Vikatan Readers’ questions!

எஸ்.பிரிஸில்லா, சென்னை-5.

”உங்க இசையமைப்பில் வரும் பல பாடல்களில் தமிழ் மொழியை வெச்சு ஏதாவது புதுமை செய்து இருப்பீங்க. அதெல்லாம் எப்படி அமைஞ்சுது?”

”அதுக்கெல்லாம் அந்தப் படத்தோட இயக்குநர், தயாரிப்பாளர், கவியரசு கண்ணதாசன், என் இசைக் குழு… இவங்க எல்லாருமே காரணம். சூழல்தான் ஒரு பாட்டை மெருகேத்திப் பளபளக்கவைக்கும்னு நான் நம்புறேன். உதாரணத்துக்குச் சொல்றேன், ‘பட்டினப்பிரவேசம்’ படத்துக்கு நான் ஒரு டியூன் போட்டேன். டியூனைக் கேட்ட பாலசந்தர், இந்தப் பாட்டுக்குப் புதுமையா ஏதாவது வரிகள் போட்டா நல்லா இருக்கும்னு சொன்னார். என் டியூனைக் கேட்ட கண்ணதாசன், ‘இதுக்கு ல… ல…னு முடியிற மாதிரி வார்த்தைகளைப் போட்டா நல்லா இருக்கும்’னு சொன்னார். பாலசந்தரும் சரி சொல்ல, அப்படி உருவானதுதான் ‘வான் நிலா… நிலா அல்ல… உன் வாலிபம் நிலா’ங்கிற பாட்டு!”

கா.விஜயராகவன், சுரக்குடி.

”எதிர்காலத்தில் தமிழில் மெலடி பாடல்களே இல்லாமல் போயிடுமோ?”

”மனசுக்கு ரொம்பச் சங்கடமா இருக்குங்க. மெலடி பாடல்கள் வரலைனு சொல்ல முடியாது. வர விட மாட்டேங்கிறாங்கன்னுதான் சொல்லணும். ஃபாஸ்ட் பீட்னு அவசர அவசரமா அள்ளித் தெளிக்கிறாங்க. அதைத்தான் இந்தக் காலத்து இளைஞர்களும் கொறிக்கிறாங்க. ஆனா, எப்பவும் காலம் கடந்து நிக்கப்போறது மெலடி பாடல்கள் மட்டும்தான்.”

எம்.மாலதி, நாகப்பட்டினம்.

”உங்களுக்கு ‘மெல்லிசை மன்னர்’கிற பட்டம் கொடுத்தது யார்?”

”1963-ம் வருஷம்னு நினைக்கிறேன்… திருவல்லிக்கேணி கல்ச்சுரல் அகாடமி எங்க கச்சேரிக்கு ஏற்பாடு செஞ்சிருந்தது. என்.கே.டி. கலா மண்டபத்துல நிகழ்ச்சி நடந்தது. ஏகப்பட்ட கூட்டம். அந்த மேடையில்தான் ரசிகர்கள் மத்தியில் எனக்கும் ராமமூர்த்திக்கும் சிவாஜி கணேசன் ‘மெல்லிசை மன்னர்’ங்கிற பட்டத்தைக் கொடுத்தார். அது காலாகாலத்துக்கும் நிலைச்சது ஆண்டவன் அனுக்கிரஹம்!”

எம்.கே.பாலு, திருத்தணி.

”உங்கள் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்… நீங்கள் இதுவரை ஒரு பாடலுக்கான இசையைக் கூட காப்பி அடித்ததே இல்லையா?”

”ஒரு உதாரணம் சொல்றேன். ‘சுகம் எங்கே’னு ஒரு படம். மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிச்சாங்க. டி.ஆர்.சுந்தரம் என்கிட்ட கேட்டார்… ‘நாங்க இந்தி டியூன்லாம் கொடுத்து மியூஸிக் போடச் சொல்வோம் போடுவீங்களா?’ ‘சார், இந்த வாய்ப்பே கிடைக்கலைன்னாலும் பரவாயில்லை. சொந்தமா டியூன் போடறேன். பிடிச்சா சான்ஸ் கொடுங்க… இல்லைன்னா வேண்டாம்’னு சட்டுனு எந்திரிச்சுட்டேன். ரோஷம் உள்ளவன் காப்பி அடிக்கமாட்டான் சார்!”

எம்.செந்தில்குமார், மதுரை-5.

”மெட்டுக்குப் பாட்டெழுத மாட்டாராமே பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்… உண்மையா?”

”உண்மைதான். தன்னோட பாட்டு வரிகளுக்குத்தான் மெட்டுப் போடணும்கிறதை ஒரு வைராக்கியமாவே வெச்சிருந்தார் பட்டுக்கோட்டையார்.

‘பாசவலை’னு ஒரு படம். அந்தப் படத்துல ஒரு காட்சிக்குரிய பாடலை முதலில் கண்ணதாசன் எழுதினார். தயாரிப்பாளர், இயக்குநரை அந்தப் பாட்டு வரிகள் அவ்வளவா ஈர்க்கலை. அப்புறம் கவிஞர் மருதகாசிகிட்ட எழுதச் சொன்னோம். அதுவும் சிறப்பா அமையலை. அப்போ ஒரு நண்பர் மூலம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எனக்கு அறிமுகமானார். ‘சரி… எதுக்கும் இவரையும் எழுதச் சொல்லிப் பார்ப்போம்’னு அவர்கிட்டே சிச்சுவேஷனைச் சொல்லி எழுதச் சொன்னோம். எழுதிட்டு வந்து கொடுத்தார். பிரமாதமான வரிகளா இருந்தன…

‘குட்டி ஆடு தப்பி வந்தா குள்ளநரிக்குச் சொந்தம்
குள்ளநரி மாட்டிக்கிட்டா கொறவனுக்குச் சொந்தம்
தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்
சட்டப்படி பார்க்கப்போனா எட்டடிதான் சொந்தம்’

-பாட்டு எங்க எல்லாருக்கும் பிடிச்சுப்போச்சு. உடனே மெட்டுப் போட்டு பாடல் பதிவாச்சு. இன்னிக்கும் அவர் பேர் சொல்ற பல பாடல்கள் அவர் எழுதின பிறகு மெட்டு போடப்பட்டதுதான். ‘புதையல்’ படத்துல நான் வேண்டி விரும்பிக் கேட்டுக்கிட்டதால, என் மெட்டுக்கு ஒரே ஒரு பாட்டு எழுதிக்கொடுத்தார். சினிமாவில் நான் பார்த்த மனிதர்கள்ல ரொம்பத் துணிச்சலானவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்!”

M.S.Viswanathan answer Vikatan Readers’ questions!

கி.மனோகரன், பொள்ளாச்சி.

”கண்ணதாசன்-வாலி… இரண்டு கவிஞர்களையும் அவர்கள் உச்சத்தில் இருந்த சம காலத்தில் எப்படிச் சமாளித்தீர்கள்?”

”கண்ணதாசன் – வாலி… இந்த ரெண்டு ஜாம்பவான்களுடன் வேலை பார்த்ததை இப்போ நினைச்சுப் பார்த்தாலும் எனக்குப் பிரமிப்பாவும் ஆச்சர்யமாவும் இருக்கு. எனக்கு இசைமட்டும் தான் தெரியும். தமிழ்ல புகுந்து விளையாடும் அவங்களுக்கு ஈடுகொடுக்கிறதுக்காகவே இசையில் கூடுதலா நான் உழைக்க வேண்டிஇருந்தது.

நானும் கண்ணதாசனும் இணைஞ்சு பரபரப்பா வேலை பார்த்துட்டு இருந்த காலகட்டத்துல, வாலியை எனக்கு அறிமுகம் செய்தது என் நண்பன் நடிகர் வி.கோபாலகிருஷ்ணன். வாலியோட சரளமான, இனிப்பான தமிழ் எனக்குப் பிடிச்சிருந்தது. ‘இதயத்தில் நீ’ங்கிற படத் துல ஒரு பாட்டு எழுதச் சொன்னேன். ‘பூ வரையும் பூங்கொடியே… பூமாலை சூட வா…’ங்கிற அந்தப் பாட்டு சூப்பர் ஹிட் ஆச்சு. அடுத்ததா ‘கற்பகம்’ படத்துல அவரைப் பாட்டு எழுதவைக்கணும்னு எனக்கு ஆசை. ஆனா, அந்தப் படத்தோட இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ் ணன், கண்ணதாசன் வெறியர். உலகத்துலயே கண்ணதாசன் மட்டும்தான் கவிஞர்னு நினைக்கிறவர். அவர்கிட்ட போய், ‘வாலிக்கு உங்க ‘கற்பகம்’ படத்துல ஒரு பாட்டு எழுத வாய்ப்பு தரணும்’னேன். மறுத்துட்டார். ‘பூ வரையும் பூங்கொடியே…’ பாட்டை அவர்கிட்ட ரெண்டு மூணு தடவை திரும்பத் திரும்பப் போட்டுக் காட்டினேன். ரொம்பப் பிகு பண்ணிக்கிட்டுதான்… சரின்னார். வாலி எழுதின ‘அத்தை மடி மெத்தையடி…’ங்கிற பல்லவியைக் கேட்டுட்டு கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அசந்துபோயிட்டார். அது மட்டும் இல்லாம, அதே படத்தில் ‘மன்னவனே அழலாமா…’ங்கிற பாட்டு எழுதவும் வாலிக்கு அவர் வாய்ப்பு கொடுத்தார்.

வாலி அறிமுகமான இந்தச் சமயத்துல, ‘விசு நம்மளை விட்டு விலகிப்போயிடுவானோ’ங்கிற ஒரு சந்தேகம் என் மேல கண்ணதாசனுக்கு இருந்தது. எல்லாரையும் சமமாக் கொண்டாடுற என் மனசால நாளடைவில் கவியரசரின் சந்தேகத்தையும் போக்கினேன்.

ரெண்டு கவிஞர்களையும் சமாளிக்க எனக்குக் காலமும் கைகொடுத்தது. எப்படின்னா… எம்.ஜி.ஆருக்கு வாலியும், சிவாஜிக்கு கண்ணதாசனும் நிறையப் பாடல்கள் எழுதும்படியான நேரம் அப்போ அமைஞ்சது. அதுவும்கூட என் வண்டி இவங்க மத்தியில கடகடன்னு ஓடுனதுக்கு ஒரு காரணம்!”

கு.ராமலிங்கம், மதுக்கூர்.

” ‘நேற்று… இன்று… நாளை’ படத்தில் உங்களை வைத்து எம்.ஜிஆர். கேம் விளையாடினாராமே… என்ன விளையாட்டு அது?”

” ‘நேற்று… இன்று… நாளை’ படத்தைத் தயாரிச்சவர் நடிகர் அசோகன். எம்.ஜி.ஆர். ஹீரோ. அந்தப் படத்துல எல்லா பாட்டும் சூப்பர் ஹிட். ஆனா, கம்போஸிங்குக்கு முன்னாடி அந்தப் படத்தின் ஒவ்வொரு பாட்டுக்கும் குறைச்சலா நூறு மெட்டுக்களாவது போட்டிருப்பேன். அதைத் தினம் ராமாவரம் தோட்டத்துக்கு எடுத்துட்டுப் போய் எம்.ஜி.ஆர்கிட்டே காட்டிட்டு… உதட்டைப் பிதுக்கிக்கிட்டே திரும்பி வருவார் அசோகன். எல்லா மெட்டையும் ‘வேண்டாம்… நல்லாயில்ல… இது சரியில்ல’னு சொல்லி எம்.ஜி.ஆர். திருப்பிவிட்டுட்டே இருந்ததுல, நாலஞ்சு மாசம் ஓடிப்போச்சு. இதுக்கு மேலயும் என்னால மெட்டுப் போட முடியாதுன்னு நானும் உதட்டைப் பிதுக்கிட்டேன். அதைக் கேள்விப் பட்டதும் எம்.ஜி.ஆர். என்னைத் தேடி வந்தார். ‘டேய்… விசு, நீ போட்ட ஒவ்வொரு டியூனுமே அற்புதம். ஆனா, உன் டியூன்களை நான் உடனே ஓ.கே. பண்ணியிருந்தா, அப்பவே ஷூட்டிங் கிளம்பியிருப்பாங்க. ஆனா, அப்போ என்கிட்ட கால்ஷீட் இல்லடா. அதான் உன்னைவெச்சு கேம் விளையாடினேன்’னு சொன்னாரு பாருங்க… குறும்புக்கார மனுஷன்!”

சு.பால்ராஜ், மதுரை-4.

”நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வரும் நல்ல பழக்கம் எது?”

”எப்பவும் ஏகப்பட்ட பழக்கங்களை நான் கடைபிடிக்கிறேன். அதெல்லாம் நல்லதா… கெட்டதானு எனக்குத் தெரியாது. அதுல குறிப்பா சொல்லணும்னா, இப்பவும் மேடையில இசை நிகழ்ச்சி செய்யும்போது முதல் பாடலா கவியரசரின் ‘புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே…’ பாட்டைப் பாடித்தான் ஆரம்பிப்பேன். அதே மாதிரி இசை நிகழ்ச்சியை முடிக்கிறப்ப, ‘புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே… எங்கள் கண்ணதாசன் புகழ் பாடுங்களேன்’னு சொல்லி முடிப்பேன். இதைப் பழக்கமா இல்லை… வழக்கமாவே வெச்சிருக்கேன்!”

ரா.பாலகுமாரன், சென்னை-63.

”கண்ணதாசன் – எம்.எஸ்.விஸ்வநாதன் – டி.எம்.சௌந்தர்ராஜன் என இந்த அட்டகாசக் கூட்டணியில் உருவான பாடல்களில் உங்கள் மனத்தைக் கவர்ந்த பாடல் எது?”

” ‘வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ’ பாட்டுதான் எங்க மூணு பேரு காம்பினேஷன்ல எனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டு!”

ஆர்.சிவச்சந்திரன், வேலூர்-4.

”இசைத் துறையில் எத்தனையோ சாதனைகள் படைச்சிருக்கீங்க. உங்க மனசுக்கு நெருக்கமான சாதனை என்ன?”

”ஊர் உலகத்துல என்ன நடக்குதுன்னு தெரியாம ராப்பகலா உழைச்சுப் போட்ட மெட்டுகளை இன்னிக்கும் நீங்கள்லாம் கொண்டாடுறதுதான் நான் வாழ்ந்த வாழ்க்கைக்கான அர்த்தம். சினிமாவில் இல்லாம என் மனசுக்கு நிறைவான பங்களிப்புன்னா… என் இசையில் உருவான ‘கிருஷ்ண கானம்’ இசைத்தட்டைச் சொல்லலாம். தமிழ்ல வந்த பக்தி இசையில் இன்னைக்கு வரைக்கும் அந்த இசைத் தொகுப்பின் சாதனையை வேற எதுவும் முறியடிக்கலை. அடுத்து, தமிழ்த் தாய் வாழ்த்தான ‘நீராரும் கடலுடுத்த…’ பாடலுக்கு நான் இசையமைச்சதை என் வாழ்க்கையின் மிகப் பெரிய பாக்யமா நினைக்கிறேன்!”

M.S.Viswanathan answer Vikatan Readers’ questions!

எஸ்.பார்வதி, தூத்துக்குடி.

”ஒரு பாட்டுக்கு நீங்க போட்ட மெட்டுகள் எல்லாமே நல்லா இருந்தா என்ன செய்வீங்க?”

”நிறைய தடவை அப்படி நடந்துருக்கு. உதாரணத்துக்கு, ‘என் தங்கை’ படத்துல ஒரு பாட்டுக்காக நான் போட்ட எல்லா மெட்டும் அந்தப் படத்தோட தயாரிப்பாளர் நடிகர் பாலாஜிக்குப் பிடிச்சுப்போச்சு. எதை செலெக்ட் பண்றதுனு அவர் கையைப் பிசைஞ்சுக்கிட்டு இருந்தார். அப்போ அவர் ஆபீஸுக்கு லெட்டர் கொண்டுட்டு தபால்காரர் வந்தார். அவரைக் கூப்பிட்டு, எல்லா டியூனையும் போட்டுக் காட்டி ஒரு டியூனை செலெக்ட் செய்யச் சொன்னார். அந்த தபால்காரர் செலெக்ட் செஞ்ச மெட்டு…

‘கேட்டவரெல்லாம் பாடலாம்
என் பாட்டுக்குத் தாளம் போடலாம்!”’

எம்.நாகப்பன், திருவாரூர்.

”இன்றைய சினிமா கலைஞர்களுக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை என்ன?”

”அறிவுரை சொல்ற அளவுக்கு நான் பெரிய ஆள் கிடையாது. ஆனா, ஒண்ணு சொல்றேன்… யாரா இருந்தாலும் உண்மையா இருக்கணும், கடுமையா உழைக்கணும். மாதா, பிதா, குரு, தெய்வம்கிற மாதிரி… அப்பா – அம்மாவை வணங்கணும். அந்த மனுஷ தெய்வங்கள் இல்லைன்னா நாம கிடையாது. அடுத்து, குரு பக்தி. நீங்க யாரால முன்னேறி மேல வந்தீங்களோ… அவங்களைக் குருவா மதிச்சு வணங்கணும். எனக்கு இசையமைப்பாளர்ங்கிற அடையாளம் கொடுத்தவர் என் குரு எஸ்.எம்.சுப்பையா நாயுடு. அவர் கடைசிக் காலத்துல, ‘நான் இறந்துபோனா… என் உடலுக்கு விஸ்வநாதன்தான் கொள்ளி வைக்கணும்’னு எழுதிவெச்சிருந்தார். அவரோட விருப்பப்படியே நான்தான் அவருக்குக் கொள்ளி வெச்சேன். எது உங்களைக் கைவிட்டாலும், குரு பக்தியும் நன்றி உணர்ச்சியும் உங்களைக் கைவிடவே விடாது!”

– விகடன் டீம்

(13.02.2013 முதல் 13.03.2013 ஆகிய தேதிகளிலிட்ட ஆனந்த விகடன் இதழிகளிலிருந்து…)

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.