ஜனாதிபதி வேட்பாளருக்காக எடப்பாடியிடம் ராகுல் ஆதரவு கேட்கவில்லை: காங்கிரஸ் விளக்கம்

புதுடெல்லி: ‘ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சி வேட்பாளர் யஸ்வந்த் சின்காவுக்காக எடப்பாடி பழனிசாமியிடம் ராகுல் காந்தி ஆதரவு கேட்கவில்லை’ என காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் யஸ்வந்த் சின்கா போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு கேட்டு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியிடம் போனில் பேசியதாக ஆங்கில பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியானது. தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் போது, எடப்பாடியிடம் ராகுல் பேசியதாக வெளியான இந்த செய்தி, பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இத்தகவலை காங்கிரஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விடுத்துள்ள அறிக்கையில், ‘இது முற்றிலும் போலியான, பொய்யான தகவல். இப்படிப்பட்ட தொலைபேசி அழைப்பு மேற்கொள்ளப்படவில்லை. இதுபோன்ற குழப்பத்தை ஏற்படுத்தும், பலவீனப்படுத்தும் முயற்சிகளை முறியடிக்கும் அளவுக்கு, திமுக-காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது,’ என கூறி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.