கிருஷ்ணகிரி | உதவித்தொகை கோரிய மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக உதவி செய்த ஆட்சியர்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில் நடந்தது.

இக்கூட்டத்தில், பொது மக்களிடம் விலையில்லா தையல் இயந்திரம், சலவைப் பெட்டி, உதவித்தொகைகள், சாலை வசதி, மின் இணைப்பு, வீட்டுமனைப் பட்டா மற்றும் பல்வேறு கோரிக்கைகள் கொண்ட 276 மனுக்களை ஆட்சியர் பெற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, தகுதியான மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தகுதியில்லாத மனுக்களுக்கு உரிய விளக்கத்தினை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.

பின்னர், ஊத்தங்கரை தாலுகா, பெரியதள்ளப்பாடி கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான நாகவேணி என்பவர், தனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவ சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் இருந்து வந்த நிலையில், மாதாந்திர உதவித்தொகை பெற்று வந்த எனக்கு தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, மாதாந்திர உதவித்தொகை வழங்க வேண்டும் என மனு அளித்ததன்பேரில் ஆட்சியர், உடனடியாக மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணையும், தனது விருப்ப நிதியிலிருந்து ரூ.5 ஆயிரம் காசோலையாகவும் வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பாக்கியலட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அமீர்பாஷா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.