திருப்பதி உண்டியல்: வரலாறு காணாத கலெக்‌ஷன்!

திருப்பதி திருமலையில் வீற்றிருக்கும் ஏழுமலையானை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் செல்லும் நிலையில், கொரோனா காரணமாக கடந்த சில மாதங்களாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள காரணத்தால், மாநில அரசு அளித்துள்ள தளர்வுகளின்படி, திருப்பதியில் சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால், கூட்டம் அலைமோதி வருகிறது. பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருப்பதியில் தினமும் ரூ.300 ஆன்லைன் தரிசனத்தில் 25,000 பக்தர்களும், ஸ்ரீவாணி அறக்கட்டளை இதர சேவைகள் மூலம் 70,000க்கும் மேற்பட்ட பக்தர்களும் தரிசனம் செய்து வருகின்றனர்.

பணக்கார சுவாமிகளில் ஒருவராக அறியப்படும் திருப்பதி ஏழுமலையானை நாள்தோறும் தரிசிக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள், உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம். அதுதவிர, கோயிலுக்கு ஏராளமான நன்கொடைகளையும் அளிப்பர். உண்டியலில் விழும் காணிக்கை பணத்தை எண்ணும் நிகழ்வே வைபவம் போன்று நடைபெறும்.

இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு பக்தர்கள் உண்டியல் காணிக்கை செலுத்தியுள்ளனர். அதாவது, ஒரே நாளில் ரூ.6.8 கோடி காணிக்கையை பக்தர்கள் உண்டியலில் செலுத்தியுள்ளனர். இதற்கு முன்னர் 2012ஆம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி பக்தர்கள் செலுத்திய ரூ.5.73 கோடியே அதிகபட்ச காணிக்கையாக இருந்த நிலையில், தற்போது ரூ.6.8 கோடி காணிக்கையை பக்தர்கள் ஒரேநாளில் உண்டியலில் செலுத்தியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.