அக்னிபத் திட்டம்: விமானப்படையில் சேர 7.49 லட்சம் பேர் விண்ணப்பம்!

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவத்தில் ஆள்சேர்ப்பதற்கான புதிய திட்டமான அக்னிபத் எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த திட்டத்தின்படி, 17.5 முதல் 21 வயதுடைய இருபாலரும் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளில் சேரலாம். இந்த திட்டத்தின் கீழ், பணியில் சேருவோர் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவர். அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் சேவையாற்ற வேண்டும். நடப்பாண்டில் 46,000 அக்னி வீரர்கள் தேர்வு செய்யப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த திட்டத்தை ஆதரித்தும், விமர்சித்தும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேசமயம், இந்தத் திட்டத்துக்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனாலும், இந்த திட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசு திட்டவட்டமாக உள்ளது.

டூர் ஆப் தி டூட்டி எனும் இந்த அக்னிபத் திட்டத்தின் கீழ் அக்னி வீரர்களை தேர்வு செய்யும் பணி அண்மையில் தொடங்கியது. அதன்படி, அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேர 7,49,899 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் 24ஆம் தேதி தொடங்கிய விண்ணப்ப பதிவு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இந்த தகவலை இந்திய விமானப்படை வெளியிட்டுள்ளது.

இதுவரை விமானப் படை பணி நியமனத்திற்கு பெறப்பட்ட விண்ணப்பங்களில் இதுவே அதிகம் என்று தெரிவித்துள்ள இந்திய விமானப்படை, இதற்கு முன்னர் 6,31,528 பேர் விண்ணப்பித்ததே அதிகமாக இருந்தது எனவும் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.