கடுவாவுக்கு யு/ஏ சான்றிதழ் ; சிக்கலின்றி வெளியாகிறது
பிரித்விராஜ் நடிப்பில் நீண்ட நாளைக்கு பிறகு அவர் நடித்துள்ள மாஸ் ஆக்சன் படமாக மலையாளத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கடுவா. மலையாளத்தில் அதிகப்படியான ஆக்சன் படங்களை இயக்கிய இயக்குனர் ஷாஜி கைலாஷ், 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் பிரித்விராஜை வைத்து இயக்கியுள்ள படம் இது. மலையாளத்தில் உருவாகி, தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்தியிலும் இந்த படம் வெளியாகிறது. கடந்த ஜூன் 30-ஆம் தேதி வெளியாக வேண்டிய இந்தப் படம் திடீரென ஒரு வாரம் கழித்து ஜூலை 7ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்த படம் கடுவாக்குன்னல் குருவச்சன் ஜோஸ் என்பவரின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி இருப்பதாகவும் தற்போது உயிருடன் இருக்கும் அவர் இந்த படம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை கேட்டதால் இந்த படத்தின் ரிலீஸ் தேதிமாற்றி வைக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. இன்னொரு பக்கம் இந்த படத்தின் சென்சார் வேலைகள் முடியவில்லை அதனால் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது என்றும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. மற்ற சில பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு நாளை இந்த படம் மலையாளத்தில் வெளியாகிறது. நாளை மறுநாள் (ஜூலை-8) இந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளில் வெளியாகிறது என நடிகர் பிரித்விராஜ் அறிவித்துள்ளார்.