மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கூட்டணி அரசு கவிழ்ந்த பிறகு மகா விகாஷ் அகாடி உடைந்துவிட்டதாக கூறப்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு முதல்வர் பதவியை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிவசேனா – பாஜக கூட்டணி முறிந்தது. இதனால் களத்தில் இறங்கிய சரத் பவார், காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை ஒன்று சேர்த்து மகாவிகாஷ் அகாடி என்ற புதிய அணியை உருவாக்கினார். இதில் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்றார். இக்கூட்டணி அரசு சமீபத்தில் ஏக்நாத் ஷிண்டே பிரிவால் கலைக்கப்பட்டது.
கடந்த மாதம் மகாராஷ்டிராவில் சட்டமேலவைத் தேர்தல் நடந்தது. இதில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் கட்சி மாறி வாக்களித்தனர். கட்சி மாறி வாக்களித்த கையோடு அவர்களை தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே சூரத்திற்கு அழைத்து சென்றுவிட்டார். இந்த சட்டமேலவைத் தேர்தலில் சிவசேனா மட்டுமல்லாது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 7 பேரும் கட்சி மாறி வாக்களித்திருந்தனர். அவர்கள் மீது கட்சித்தாவல் தடுப்புச் சட்டத்தின் மூலம் காங்கிரஸ் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதோடு மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு மகாவிகாஷ் அகாடியில் பிளவு ஏற்பட்டுவிட்டதாக செய்திகள் வெளியானது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் பிரித்விராஜ் சவான் அளித்துள்ள பேட்டியில், “மகாவிகாஷ் அகாடி இன்னும் அப்படியேதான் இருக்கிறது. அதேசமயம் கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 7 பேர் மீது கட்சித்தாவல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் பாஜக தொடர்பில் இருக்கலாம்” என்று தெரிவித்தார். இது குறித்து மற்றொரு காங்கிரஸ் தலைவர் கூறுகையில், “ஆட்சி கவிழ்ப்புக்கு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை குறையும் பட்சத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பயன்படுத்த பாஜக மாற்றுத்திட்டம் வைத்திருக்கலாம். சிவசேனாவில் போதிய எம்.எல்.ஏ.க்கள் கிடைத்ததால் அத்திட்டத்தை கைவிட்டு இருக்கலாம்” என்று தெரிவித்தார்.