வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பீஜிங்: சீனாவின் ஜியான் மற்றும் ஷாங்காய் நகரங்களில், 300க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அடுத்து, கடைகள், வணிக வளாகங்கள் அடைக்கப்பட்டன. இதனால், லட்சக்கணக்கானோர் வீடுகளில் முடங்கி உள்ளனர்.
கொரோனா வைரஸ் இல்லாத நாடாக சீனா திகழ வேண்டும் என்பது, அதிபர் ஜிங்பிங்கின் விருப்பம். அதனால், கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்தாலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு, அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்படுகிறது.ஷாங்காய் நகரில் கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து கடந்த மாதம் ஊரடங்கு தளர்த்தப்பட்டது.
இந்நிலையில் நேற்று ஷாங்காய் மற்றும் ஜியான் நகரங்களில், 300க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அவர்களில் பலருக்கு கொரேனாவின் உருமாறிய வீரியமிக்க ‘ஒமைக்ரான்’ வைரஸ் பாதிப்பு இருந்தது.இதனால் வைரஸ் பரவலை தடுக்க, ஜியான் நகரில் தற்காலிக கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.
ஜியான் நகரில் அனைத்து அலுவலகங்கள், கடைகள், வணிக வளாகங்கள், பொழுது போக்கு கூடங்கள் ஆகியவை நேற்று மூடப்பட்டன.ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து கொரோனா பரிசோதனை செய்கின்றனர். ஷாங்காய் நகரில் பல பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த வாரம், சீனாவில் பகுதி அல்லது முழு ஊரடங்கால், 11 கோடி பேர் வீட்டில் முடங்கியுள்ளதாக, ‘நோமுரா’ நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
Advertisement