புதுச்சேரி அரசியலில் இருந்து நாராயணசாமியை தள்ளிவைக்குமாறு ராகுல் காந்திக்கு 42 காங். நிர்வாகிகள் கடிதம்

புதுச்சேரி: முன்னாள் முதல்வர் நாராயணசாமியை புதுச்சேரி காங்கிரஸ் அரசியலில் இருந்து தள்ளிவைக்கவும், காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியனை மாற்றக் கோரியும் ராகுல் காந்திக்கு முன்னாள் எம்எல்ஏக்கள் உட்பட 42 கட்சி நிர்வாகிகள் கூட்டாக கையெழுத்திட்டு புகார் கடிதம் அனுப்பியுள்ளனர்.

புதுச்சேரி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏக்கள், மாநில நிர்வாகிகள் 42 பேர் கையெழுத்திட்டு ராகுல் காந்திக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ”புதுச்சேரி காங்கிரஸ் மண். ஆனால் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் வெறும் இரண்டு இடங்களை மட்டுமே காங்கிரஸ் வென்றுள்ளது. காங்கிரஸ் தோல்விக்கு பிறகு தலைமையானது தோல்விக்கான காரணம் குறித்து ஆராய குழுவை அனுப்பியது.

மாநிலத் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எம்.பி வைத்திலிங்கம் ஆகியோரிடம் ஒருங்கிணைப்பு இல்லை. அதன்படி காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியனை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். ஆனால், ஓராண்டாகியும் காங்கிரஸ் தலைவர் மாற்றப்படவில்லை.

வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெல்ல வேண்டுமெனில் தலைவரை மாற்ற வேண்டும். மக்கள் மற்றும் கட்சித் தொண்டர்களிடம் நம்பிக்கை இழந்துள்ள முன்னாள் முதல்வர் நாராயணசாமியை புதுச்சேரி அரசியலில் இருந்து தள்ளிவைக்க வேண்டும்” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.