பீகார் மாநிலம், முசாபர்பூரில் உள்ள நிதிஷேஸ்வர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்தி உதவிப் பேராசிரியராக பணியாற்றியவர் லாலன் குமார். இந்தக் கல்லூரி பி.ஆர்.அம்பேத்கர் பீகார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்.பில், முனைவர் பட்டம் பெற்றார். லாலன் குமார் 2019 செப்டம்பரில் இந்தக் கல்லூரியில் சேர்ந்தார்.
லாலன் குமார் 2019 செப்டம்பரில் பணியில் சேர்ந்ததிலிருந்து அவர் பெற்ற மொத்தச் சம்பளமான ரூ.24 லட்சத்தை பல்கலைக்கழகத்திடம் திருப்பி வழங்கி இருக்கிறார். பல்கலைக்கழக துணை வேந்தருக்கு கடிதத்துடன், தனது சம்பளத்தை திருப்பி அளித்திருக்கிறார். பல்கலைக்கழக பதிவாளரிடம் குமார் ரூ.23,82,228-க்கான காசோலையை வழங்கியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய பேராசிரியர் லாலன் குமார், “மாணவர்களுக்கு சரியாக பாடம் எதுவும் எடுக்காமல் சம்பளம் வாங்க என் மனசாட்சி அனுமதிக்கவில்லை. (கொரோனா) காலக்கட்டத்தில் ஆன்லைன் வகுப்புகளின்போதும், இந்தி வகுப்புகளுக்கு ஒரு சில மாணவர்கள் மட்டுமே வந்தனர். என்னுடைய எண்ணம் சிறப்பாக இருந்த போதிலும், என்னால் என் கடமைகளை சரிவர ஆற்ற முடியவில்லை. இந்த சூழ்நிலையில், சம்பளத்தை ஏற்றுக்கொள்வது தார்மீக ரீதியாக சரியாக இருக்காது” என்றார்.
சரியாகப் படம் எடுக்காமல் சம்பளம் வாங்க மனம் இடம் கொடுக்கவில்லை எனக்கூறி, மூன்று வருட சம்பளத்தை திருப்பிக் கொடுத்த ஆசிரியரின் செயலை அனைவரும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.