UK PM Boris Johnson resigns: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா?

இங்கிலாந்து பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த போரிஸ் ஜான்சன் கடந்த 2019ஆம் ஆண்டு பதவியேற்றார். பதவியேற்றது முதலே பல்வேறு சர்ச்சைகளில் அவர் சிக்கி வருகிறார். கொரோனா காலத்தில் பெருந்தொற்றை அவர் சரியாக கையாளவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. மேலும், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி பார்ட்டி கொண்டாடியதற்காக போரிஸ் ஜான்சனுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இது தொடர்பாக போரிஸ் ஜான்சன் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார். அந்த சமயத்திலேயே அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றன. இதையடுத்து, போரிஸ் ஜான்சனுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சொந்தச் கட்சியைச் சேர்ந்த 54 எம்.பி.,க்கள் கட்சித் தலைமைக்கு கடிதம் எழுதினர். அதன்படி, போரிஸ் ஜான்சன் அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிந்தது. 211 எம்.பி.,க்களின் ஆதரவுடன் போரிஸ் ஜான்சன் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில், போரிஸ் ஜான்சன் அரசில் துணைத் தலைமைக் கொறடாவாக பதவி வகித்த கிறிஸ் பின்சர், நைட் கிளப் ஒன்றில், 2 ஆண்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது. சொந்த கட்சியிலும் இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அவரது பதவி பறிக்கப்பட்டு, எம்.பி., பதவியில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பாக மன்னிப்பு கோரிய போரிஸ் ஜான்சன், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் எவருக்கும் இந்த அரசாங்கத்தில் இடமில்லை என்றார்.

ஆனால், கிறிஸ் பின்சர் விவகாரத்தில் அவரை பற்றி தெரிந்தும், தாமதமாக நடவடிக்கை எடுத்ததாகவும், போரிஸ் ஜான்சன் மீதான நம்பிக்கையை இழந்து விட்டோம் எனவும் கூறி நிதியமைச்சர் ரிஷி சுனக் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித் ஆகிய இருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இருப்பினும், அடுத்த சில மணி நேரத்தில் நதீம் சஹாவியை புதிய நிதி அமைச்சராகவும், ஸ்டீவ் பார்க்லேவை சுகாதார அமைச்சராகவும் போரிஸ் ஜான்சன் நியமித்தார்.

மேலும் 2 அமைச்சர்கள் ராஜினாமா – பிரிட்டன் பிரதமருக்கு பின்னடைவு!

இந்த நியமனங்களை போரிஸ் ஜான்சன் செய்த அடுத்த சில மணி நேரத்தில், உயர்கல்வி அமைச்சர் வில் குயின்ஸ், பள்ளிக் கல்வி அமைச்சர் ராபின் வால்கர் ஆகியோர் பதவி விலகினர். அதன் தொடர்ச்சியாக, போரிஸ் ஜான்சனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இங்கிலாந்து அமைச்சர்கள் பலரும் தங்களது பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர். இதுவரை 40க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தெரிகிறது.

சொந்தக் கட்சிக்குள் தொடர்ந்து எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று மாலைக்குள் அவர் ராஜினாமா செய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.