“நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்டோரின் பிரதிபலிப்பு” – குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு முதல் உரையின் முழு வடிவம்

புதுடெல்லி: “அடுத்த சில மாதங்களில் ஜி 20 மாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்க இருக்கிறது. அதிலுள்ள 20 பெரிய நாடுகள் இந்தியாவின் தலைமையின் கீழ், உலகின் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க இருக்கின்றன” என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பேசினார்.

நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு இன்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி பிரமானம் செய்து வைத்தார். பதவி ஏற்ற பின்னர் குடியரசுத் தலைவர் ஆற்றிய முதல் உரை: “வணக்கம். இந்திய அரசியலமைப்பின் உயர்ந்த பதவிக்கு என்னை தேர்ந்தெடுத்ததற்காக நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் என் இதயபூர்வ நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் எனக்கு அளித்த வாக்கு, நாட்டில் உள்ள கோடிக்கணக்கான குடிமக்களின் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

இந்தியாவின் அனைத்து குடிமக்களின் நம்பிக்கைகள், விருப்பங்கள் மற்றும் உரிமைகளின் அடையாளமான இந்த புனிதமான நாடாளுமன்றத்தில் இருந்து அனைத்து குடிமக்களையும் நான் பணிவுடன் வாழ்த்துகிறேன். உங்களுடைய அன்பு, நம்பிக்கை மற்றும் ஆதரவு ஆகியவை என் பணிகள் மற்றும் கடமைகளை செய்வதற்கு, சிறந்த வலுசேர்க்கும்.

விடுதலை பெருவிழாவை நாம் கொண்டாடி வரும் இந்த முக்கிய தருணத்தில், குடியரசுத் தலைவராக என்னை நாடு தேர்ந்தெடுத்துள்ளது. இன்றிலிருந்து அடுத்த சில நாட்களில் நாடு தனது 75-வது சுதந்திர ஆண்டை நிறைவு செய்யவுள்ளது.

புதிய வளர்ச்சி நோக்கிய பயணம்

நாட்டின் 50-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டபோது, என் அரசியல் வாழ்க்கையை நான் தொடங்கியதும் தற்செயலாக அமைந்தது. 75-வது சுதந்திர ஆண்டு கொண்டாடப்படும் வேளையில், இன்று நான் புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டேன். அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தியா தனது தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதில் முழு உத்வேகத்துடன் ஈடுபட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது எனக்கு கிடைத்த சிறந்த கவுரவமாகும்.

சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் குடியரசுத் தலைவராக நான் இருக்கிறேன். சுதந்திர இந்தியாவின் குடிமக்கள் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், இந்த விடுதலை பெருவிழா கொண்டாட்டத்தில் நாம் விரைவாக பணியாற்ற வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளில் அனைவருடைய முயற்சி மற்றும் அனைவருடைய கடமை என்ற அடிப்படையில், விடுதலை பெருவிழாவின் நோக்கங்களை அடைய வேண்டும். நமது கூட்டு முயற்சியால், கடமையாற்றி, இந்தியாவின் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிய புதிய வளர்ச்சிப் பயணத்தை அடைய வேண்டும்.

ஜூலை 26-ம் நாளான நாளை, நாம் கார்கில் வெற்றி தினத்தை கொண்டாட உள்ளோம். இந்த தினம், இந்திய ஆயுதப்படையினரின் துணிச்சல் மற்றும் கட்டுப்பாட்டின் அடையாளமாக திகழ்கிறது. நாட்டின் ஆயுதப்படையினர் மற்றும் அனைத்து ஆண், பெண் குடிமக்களுக்கும், நான் இன்று எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்திய ஜனநாயகத்தின் வலிமை

நாட்டின் கிழக்குப்பகுதியில் உள்ள ஒடிசாவின் சிறிய பழங்குடியினர் கிராமத்தில் எனது வாழ்க்கை பயணத்தை தொடங்கினேன். ஆரம்ப கல்வியை கற்பதே, கனவாக இருந்த பின்னணியில் இருந்து நான் வந்துள்ளேன். பல சிரமங்கள் இருந்தாலும், என்னுடைய உறுதிப்பாடு வலிமையாக இருந்தது. நான் தான் எனது கிராமத்திலிருந்து கல்லூரிக்கு சென்ற முதல் பெண்.

நான் பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்தவள். வார்டு கவுன்சிலராக இருந்த எனக்கு, இந்திய குடியரசுத் தலைவராகும் வாய்ப்பு கிடைத்தது. இது தான் இந்தியாவின், ஜனநாயகத்தின் சிறப்பாகும். ஊரக பழங்குடியின பகுதியில் ஏழை வீட்டின் மகளாக பிறந்தவள், இந்திய அரசியலமைப்பின் உயர்ந்த பதவியை அடைய முடியும் என்பதே நமது ஜனநாயகத்தின் வலிமையாகும்.

குடியரசு தலைவர் பதவியை அடைந்தது எனது தனிப்பட்ட சாதனை அல்ல. இது இந்தியாவின் ஒவ்வொரு ஏழை மக்களின் சாதனையாகும். நான் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம், இந்தியாவில் உள்ள ஏழை மக்களும், கனவு கண்டு அதை அடைய முடியும் என்பது நிரூபணமாகியுள்ளது. நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்டவர்களும், வளர்ச்சியின் பலன்கள் மறுக்கப்பட்டவர்களும், ஏழைகள், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆகியோரின் பிரதிபலிப்பை என்னிடையே காண்பது மிகுந்த திருப்தி அளிக்கிறது.

நாட்டின் ஏழைகளின் ஆசிர்வாதத்தால் நான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். கோடிக்கணக்கான பெண்கள் மற்றும் மகள்களின் கனவுகளையும், சாத்தியக் கூறுகளையும் இது பிரதிபலிக்கிறது. நான் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம், புதிய பாதையில் செல்ல விரும்பும் இந்திய இளைஞர்களின் துணிச்சலையும் எடுத்துக்காட்டுகிறது. இன்று செழுமையான இந்தியாவிற்கு தலைமை தாங்குவதற்காக நான் பெருமையடைகிறேன். இந்த பதவியில் பணியாற்றும் எனக்கு, இந்திய பெண்கள், குறிப்பாக, இளைஞர்கள் ஆகியோரின் நலன்கள் முதன்மையாக இருக்கும் என்று அனைத்து சக குடிமக்களுக்கும் நான் இன்று உறுதியளிக்கிறேன்.

வழிகாட்டிய விடுதலை வீரர்கள்

உலகின் இந்திய ஜனநாயகத்தின் மதிப்பை தொடர்ந்து வலுப்படுத்த வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. நாட்டின் முதலாவது குடியரசுத்தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் முதல் ராம்நாத் கோவிந்த் வரை இப்பதவியை அலங்கரித்துள்ளனர். இந்தப் பதவியுடன், பெரிய பாரம்பரியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பொறுப்பையும், கடமையையும் நாடு என்னிடம் ஒப்படைத்துள்ளது.

அரசியலமைப்பு சட்டப்படி, எனது கடமைகளில் மிகுந்த நேர்மையுடன் செயலாற்றுவேன். என்னைப் பொறுத்தவரை, இந்தியாவின் ஜனநாயக, கலாச்சார சிந்தனைகள் மற்றும் அனைத்து குடிமக்களும் எப்பொழுதும் என்னுடைய சக்தியின் ஆதாரமாக இருக்கும். நமது சுதந்திரப் போராட்டம் ஒரு நாடாக, இந்தியாவின் புதிய பயணத்திற்கான வழிகாட்டுதல்களை தயார் செய்திருந்தது.

சுதந்திர இந்தியாவுக்கான பல சிந்தனைகளையும், சாத்திய கூறுகளையும் உள்ளடக்கிய போராட்டங்கள் மற்றும் தியாகங்களின் தொடர்ச்சியாக நமது சுதந்திரப் போராட்டம் இருந்தது. பூஜ்ய பாபு ஸ்வராஜ், சுதேசி, ஸ்வச்தா, சத்தியாகிரகம் மூலம் இந்திய கலாச்சார சிந்தனைகளை உணர வழி காட்டினார்.

பெண்களும் பழங்குடிகளும்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், நேரு ஜி, சர்தார் படேல், பாபாசாகேப் அம்பேத்கர், பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு, சந்திரசேகர் ஆசாத் போன்ற எண்ணற்ற ஆளுமைகள் நாட்டின் பெருமையை முதன்மையாக எண்ண கற்றுக்கொடுத்தனர். ராணி லட்சுமிபாய், ராணி வேலுநாச்சியார், ராணி கைடின்லியு, ராணி சென்னம்மா போன்ற வீரமிக்க பெண்கள், நாட்டை பாதுகாப்பதிலும், கட்டமைப்பதிலும் பெண்களின் வலிமையான பங்களிப்பை பெருமளவில் உயர்த்தினார்கள்.

சந்தால் புரட்சி, பைகா புரட்சி முதல் கோல் புரட்சி மற்றும் பில் புரட்சி வரை, அனைத்து புரட்சிகளும் சுதந்திர போராட்டத்தில் பழங்குடியினரின் பங்களிப்பை வலுப்படுத்தியது. சமூக மேம்பாடு மற்றும் தேசபக்திக்காக ‘தர்தி ஆபா’ பகவான் பிர்சா முண்டா ஜியின் தியாகத்திலிருந்து நாம் உத்வேகம் பெற்றோம். நமது சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற பழங்குடியின சமுதாயத்தினரின் பங்களிப்பை அங்கீகரித்து நாடு முழுவதும் பல அருங்காட்சியகங்கள் கட்டப்பட்டுள்ளது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

புதிய அத்தியாயம் காணும் இந்தியா

75 ஆண்டு கால நாடாளுமன்ற ஜனநாயகம் மூலம், பங்கேற்பு மற்றும் ஒருமித்த கருத்து மூலம் வளர்ச்சியை இந்தியா முன்னெடுத்துச் சென்றுள்ளது. பன்முகத் தன்மைகள் நிறைந்த நம் நாட்டில், ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற நெறிமுறைகள் மூலம் பல மொழிகள், மதங்கள், பிரிவுகள், உணவுப் பழக்கங்கள், வாழ்க்கை முறைகள் ஆகியவற்றை கொண்டுள்ளோம்.

நமது சுதந்திரத்தின் 75-வது ஆண்டில் தொடங்கும் இந்த அமிர்தகாலம், இந்தியாவின் புதிய வளர்ச்சியின் காலமாகும். இன்று எனது நாடு உத்வேகம் பெற்று, புதிய சிந்தனையுடன் புதிய சகாப்தத்தை வரவேற்கத் தயாராக இருப்பதை நான் காண்கிறேன். இன்று இந்தியா ஒவ்வொரு துறையிலும், வளர்ச்சியின் புதிய அத்தியாயத்தை கண்டு வருகிறது.

கரோனா பெருந்தொற்று காலத்தில் உலக அளவில் நிலவிய நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதில் இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகள், உலகம் முழுவதும் இந்தியாவின் நம்பகத்தன்மையை மேம்படுத்தியது. இந்தியர்களாகிய நாம், சர்வதேச சவால்களை மட்டும் எதிர்க்கொள்ளாமல், உலகத்திற்கான புதிய தரத்தை வடிவமைத்தோம்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக, 200 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளது. இந்த போராட்டத்தில் இந்திய மக்கள் காட்டிய பொறுமை, துணிச்சல் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவை ஒரு சமுதாயமாக நமது வளர்ந்து வரும் வலிமையின் அடையாளமாகும்.

இந்த கடினமான சூழ்நிலையிலும், இந்தியா தன்னைத்தானே காத்துக்கொண்டதோடு அல்லாமல், உலகிற்கும் உதவியது. கரோனா பெருந்தொற்று பாதிப்பு மூலம் உலக நாடுகள் இன்று இந்தியாவை புதிய நம்பிக்கையாக பார்க்கிறது. உலகளாவிய பொருளாதார ஸ்திரத்தன்மை, விநியோகம், அமைதி ஆகியவற்றை உறுதி செய்வதில் இந்தியாவின் மீது, சர்வதேச சமுதாயம் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளது.

அடுத்து வரும் சில மாதங்களில், ஜி-20 நாடுகளின் மாநாட்டில் இந்தியா தலைமை ஏற்கவுள்ளது. இந்தியாவின் தலைமையின் கீழ், இக்குழுமத்தில் உள்ள 20 பெரிய நாடுகள், உலகில் நிலவும் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க உள்ளன. இந்தியாவின் முடிவுகளும், கொள்கைகளும் வருங்கால நடவடிக்கைகளை தீர்மானிக்கும் என்று நான் நம்புகிறேன்.

பல வருடங்களுக்கு முன்பாக, ராய்ராங்கூரில் உள்ள ஸ்ரீ அரவிந்த பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இன்னும் சில நாட்களில் ஸ்ரீஅரவிந்தரின் 150-வது பிறந்த தினத்தை நாம் கொண்டாட உள்ளோம்.

நான்காவது தொழில் புரட்சி

கல்வி குறித்த ஸ்ரீஅரவிந்தரின் சிந்தனைகள் எனக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது. கல்வி நிறுவனங்களிலும், பல்வேறு நிலைகளில் மக்கள் பிரதிநிதியாகவும், ஆளுநராகவும் நான் பணியாற்றியுள்ளேன். நாட்டின் இளைஞர்களின் உற்சாகத்தையும், தன்னம்பிக்கையையும் நான் கண்டுள்ளேன். நாட்டின் இளைஞர்கள் முன்னேற்றம் அடையும்போது, அவர்கள் தங்கள் தலைவிதியை மட்டுமல்லாமல், நாட்டின் தலைவிதியையும் வடிவமைக்கிறார்கள் என்று நமது மதிப்பிற்குரிய அடல்ஜி கூறுவார்.

இது இன்று உண்மையாவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். உள்ளூர் பொருட்களுக்கு முக்கியத்துவம் முதல் டிஜிட்டல் இந்தியா வரை ஒவ்வொரு துறையிலும் முன்னேறி வருவதன் மூலம் உலக நாடுகளுடன் நான்காவது தொழில்புரட்சியை நோக்கி இந்தியா செல்கிறது.

பெருமளவிலான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், பல்வேறு புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் இந்திய இளைஞர்கள் மிகப் பெரிய பங்களிப்பை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக, பெண்கள் அதிகாரம் பெறுவதற்காக மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் மற்றும் வகுக்கப்பட்ட கொள்கைகளால் நாட்டில் ஒரு புதிய சக்தி ஏற்பட்டுள்ளது.

மகள்களுக்கு வேண்டுகோள்

அனைத்து சகோதரிகளும், மகள்களும், மென்மேலும் அதிகாரம் பெறுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். இதன் மூலம், நாட்டை கட்டமைப்பதில், ஒவ்வொரு துறையிலும் தொடர்ந்து அவர்களது பங்களிப்பை அதிகரிக்க முடியும். உங்களுடைய எதிர்காலத்தை மட்டும் நீங்கள் கட்டமைக்கவில்லை. இந்திய எதிர்காலத்திற்கு அடித்தளமிடுகிறீர்கள் என்று நம் நாட்டின் இளைஞர்களுக்கு கூறிக்கொள்கிறேன். நாட்டின் குடியரசுத் தலைவராக நான் எப்போதும், முழு ஒத்துழைப்பை நான் உங்களுக்கு அளிப்பேன்.

வளர்ச்சி மற்றும் மேம்படுவது என்பது, தொடர்ந்து முன்னோக்கி செல்வதாகும். ஆனால் ஒருவரின் கடந்த காலத்தைப் பற்றிய விழிப்புணர்வு முக்கியமானதாகும். இன்று, நீடித்த தன்மை குறித்து உலகில் பேசப்படும் போது, இந்தியாவின் பழங்கால பாரம்பரியங்கள் மற்றும் நிலையான வாழ்க்கை முறை ஆகியவை முக்கியமானது.

உலகிற்கு வழிகாட்டும் இந்தியா

ஆயிரக்கணக்கான வருடங்களாக இயற்கையுடன் நல்லிணக்கத்துடன் வாழ்ந்த பழங்குடியின பாரம்பரியத்தில் நான் பிறந்தேன். காடுகள் மற்றும் நீர் நிலைகளின் முக்கியத்துவதை என் வாழ்க்கையில் நான் உணர்ந்துள்ளேன். இயற்கையிலிருந்து தேவையான வளங்களை அனுபவித்து அதற்கு சமமான அளவில் நாம் சேவை செய்கிறோம். இது இன்று உலக அளவில் இன்றியமையாததாகி விட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறையில் இந்தியா உலக நாடுகளுக்கு வழிகாட்டுவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

எனது வாழ்க்கையில் இதுவரை பொதுப்பணிகள் மூலமாகவே, வாழ்க்கையின் அர்த்தத்தை நான் உணர்ந்துள்ளேன். ஸ்ரீ ஜகந்நாத் க்ஷேத்திரத்தின் புகழ்பெற்ற கவிஞரான பீம் போய் ஜியின் கவிதையிலிருந்து ஒரு வரி உள்ளது, “மோ ஜீபன் பச்சே நர்கே படி தௌ, ஜகதோ உத்தர் ஹேயு”. ஒருவரின் தனிப்பட்ட நலனை விட, உலகின் நலனுக்காக பாடுபடுவதே சிறந்தது என்பது அதன் அர்த்தமாகும்.

உலக நலனுடன், நீங்கள் அனைவரும் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை நிலைநாட்ட முழு அர்ப்பணிப்புடனும், பணியாற்ற நான் எப்போதும் தயாராக இருப்பேன். பெருமை வாய்ந்த மற்றும் தற்சார்பு இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் ஒருங்கிணைந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் கடமையாற்றி முன்னேறுவோம்” என்று திரவுபதி முர்மு பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.