"ரூ.100 கோடி கொடுங்கள்…!" – ஆளுநர், ராஜ்ய சபா உறுப்பினர் பதவிகளை விலை பேசிய மோசடி கும்பல் கைது

மகாராஷ்டிராவில் கடந்த சில நாள்களுக்கு முன்பு அமைச்சர் பதவியை விலை பேசிய ஒரு கும்பல் கைதுசெய்யப்பட்டது. அதே போன்று ராஜ்ய சபை உறுப்பினர் பதவி மற்றும் கவர்னர் பதவி வாங்கிக்கொடுப்பதாக கூறி ஒரு கும்பல் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சி.பி.ஐ அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. உடனே அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு விசாரணையில் இறங்கினர். விசாரணையில் இந்த மோசடியில் ஈடுபட்டு வரும் நபர்கள் குறித்து முக்கிய தகவல் கிடைத்தது. உடனே சி.பி.ஐ அதிகாரிகள் அந்த நபர்களின் போன்களை ஒட்டுக்கேட்க ஆரம்பித்தனர். இதில் ரூ.100 கோடி கொடுத்தால் ராஜ்ய சபை உறுப்பினர் பதவி மற்றும் ஆளுநர் பதவியை வாங்கிக்கொடுப்பதாக முக்கிய பிரமுகர்களிடம் அந்தக் கும்பல் பேசி வந்தது.

அவர்களிடம் சிலர் பேரம் பேச ஆரம்பித்தனர். தொடர்ச்சியாக இது தொடர்பாக அவர்களுக்குள் பேச்சுவார்த்தை நடந்தது. சி.பி.ஐ அதிகாரிகள் தொடர்ச்சியாக போன் உரையாடல்களை ஒட்டுக்கேட்டுக்கொண்டிருந்தனர். அவர்கள் பண பலம் உள்ள முக்கிய பிரமுகர்களை அடையாளம் கண்டுகொண்டு அவர்களிடம் அரசு அமைப்புகளில் தலைவர் பதவி, அமைச்சர் பதவி, முக்கிய துறைகளில் வேலை வாய்ப்பு வாங்கித்தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டு வந்தனர்.

பணம்

அவர்களிடம் சிலர் பணம் கொடுக்க தயாராகி வந்தனர். அதனை சரியாக கண்காணித்துவந்த சி.பி.ஐ அதிகாரிகள் மோசடிப் பேர்வழிகளிடம் சிக்கும் முன்பாக கைதுசெய்தனர். சி.பி.ஐ அதிகாரிகள் வழக்கு பதிவுசெய்து மகாராஷ்டிராவைச் சேர்ந்த கமல்கர் பிரேம் குமார், கர்நாடகாவைச் சேர்ந்த ரவீந்திர வித்தல் நாயக், டெல்லியைகிச் சேர்ந்த மகேந்திர பால், அபிஷேக் ஆகியோரைக் கைதுசெய்தனர்.

கைது

அபிஷேக்கும், பிரேம் குமாரும் சேர்ந்து தங்களுக்கு தெரிந்த உயர் அதிகாரிகளுடன் தொடர்பு வைத்துக்கொண்டு இது போன்ற பதவியை வாங்கிக்கொடுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். இது போன்ற பதவியை வாங்கிக்கொடுக்ககூடிய மட்டத்தில் இருக்கும் அதிகாரிகளுடன் இவர்கள் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு பொதுமக்களிடம் மோசடி வேலையில் ஈடுபட ஆரம்பித்தனர். ராஜ்ய சபை உறுப்பினர் பதவிக்கு ரூ.100 கோடி வரை விலை பேசியிருக்கின்றனர். பிரேம் குமார் தன்னை சி.பி.ஐ அதிகாரி என்று அடையாளப்படுத்திக்கொண்டு மற்ற குற்றவாளிகளிடம் எந்த வேலையாக இருந்தாலும் கொண்டு வாருங்கள் முடித்து தருகிறேன் என்றும், நல்ல கமிஷன் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார். அதோடு இவர்கள் முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளை தங்களுக்கு தெரியும் என்று கூறி வாடிக்கையாளர்களை தங்களது பக்கம் கவர்ந்துள்ளனர் என்று சி.பி.ஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.