44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியானது, சென்னை அருகே மாமல்லபுரத்தில் வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை நடைபெறுகிறது.
இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா வரும் 28-ந்தேதி கோலாகலமாக நடக்கிறது. இந்த தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் விளையாட்டு வீரர்கள், முக்கிய தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
இதனால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனை கருத்தில்கொண்டு, வருகிற 28-ந்தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
எனவே அன்று அத்தியாவசிய சேவைகள் வழங்கும் அரசுத் துறைகள் தவிர மற்ற அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது.
இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஆகஸ்டு 27-ந்தேதி (சனிக்கிழமை) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் பணி நாளாக இயங்கும்.
மேற்கண்ட இந்த அறிவிப்பு தமிழக அரசின் ஆணை என்பது குறிப்பிடத்தக்கது.