தினசரி ஓர் அதிகாரிக்கு தலா 150 வழக்குகள் இலக்கு: ரூ.100 செலுத்த அரை மணி நேர காத்திருப்பு; சென்னைவாசிகள் அவதி

சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாக போக்குவரத்துக் காவலில் ஈடுபட்டு வரும் போலீஸார் செய்து வரும் வாகன சோதனையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், இலக்கு வைத்து வழக்குப் பதிவு செய்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் தலைக்கவகம் அணியாமல் செல்பவர்கள், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்கள், அதிக வேகத்தில் செல்பவர்கள் உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறி வாகனத்தை இயக்குபவர்களை கண்டறிய போக்குவரத்துக் காவல் துறை சார்பில் தினசரி வாகன சோதனை நடத்தப்படும். பகலில் ஒரு சில இடங்களிலும், இரவில் முக்கிய இடங்களிலும் இதுபோன்ற சோதனையை காவல் துறையினர் மேற்கொள்வார்கள்.

ஆனால், கடந்த சில நாட்களாக சென்னையில் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்துக் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். குறிப்பாக சாலையில் செல்லும் வாகனங்களை மடக்கிப் பிடித்து சோதனை செய்து வருகின்றனர். இதன் காரணமாக பெரிதும் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் கூறுகையில், ”நான் தலைக்கவகம் அனிந்து இருந்தேன். எனது மனைவி அணியவில்லை. இதன் காரணமாக அபராதம் கட்ட வேண்டும் என்று காவல் துறையினர் தெரிவித்தனர். ஆனால், எனக்கு முன்பாக 10-க்கு மேற்பட்டவர்கள் அபராதம் கட்ட காவல் துறை வாகனம் முன்பு நின்று கொண்டு இருந்தனர். நாங்களே வாகனத்தை புகைப்படம் எடுத்துக் கொண்டு சென்று வாகனத்தின் உள்ளே அமர்ந்து கொண்டிருந்த காவலரிடம் ரூ.100 அபராதம் செலுத்தினோம். இதை செலுத்த எனக்கு 30 நிமிடங்கள் ஆனது. அதுவரை எனது மனைவி உட்பட ஒரு சில பெண்கள் சாலையின் ஓரத்தில் நின்று கொண்டுதான் இருந்தனர்” என்றார்.

மற்றொரு இளைஞர் ஒருவர் கூறுகையில், “அருகில் பணியாற்றும் எனது தந்தைக்கு சாப்பாடு கொடுக்க சென்று கொண்டிருந்தேன். அருகில்தான் என்று தலைக்கவசம் அணியவில்லை. ஆனால், போகும் வழியில் காவல் துறையினர் நிறுத்தி அபராதம் விதித்தார்கள். ஆனால், முன்பு இருந்தவர்கள் எல்லாம் கட்டி முடித்து நான் கட்ட 30 நிமிடம் ஆகிவிட்டது. அபராதத்தை வாங்க இவ்வளவு நேரம் எடுத்து கொள்ளவது சரி இல்லை” என்றார்.

வாகன ஓட்டி ஒருவர் கூறுகையில், “எனது மனைவி தலைக்கவசம் அணியாத காரணத்தால் அபராதம் கட்ட வேண்டும் என்று கூறினார்கள். அங்கு பார்த்தபோது அபராதம் கட்ட பலர் நின்று கொண்டு இருந்தனர். எனவே, காவலரிடம் சென்று எனக்கு ரசீது கொடுத்து விடுங்கள், நான் பிறகு ஆன்லைனில் கட்டிக் கொள்கிறோம் என்று தெரிவித்தேன். அதற்கு அந்தக் காவலர் இங்கு கட்டினால் ரூ.100, ஆன்லைனில் கட்டினால் ரூ.1000 என்று கூறினார். அதுவும் வாகனத்தை பிடித்து வைத்துக் கொள்வேன். அபராதம் கட்டி ரசீதை காட்டிய பிறகுதான் வாகனத்தை தருவோம் என்று கூறினார். இது எந்த வகையில் சரி என்று தெரியவில்லை” என்றார்.

இது குறித்து காவல் துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, உதவி ஆய்வாளர் நிலையில் உள்ள அதிகாரிக்கு தான் அபராதம் விதிப்பதற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரிகள் தினசரி குறைந்தபட்சம் 80 ஹெல்மெட் வழக்கு, 3 போதையில் வாகனம் ஓட்டுதல் வழக்கு, சாலை விதிகளை மீறியதாக 30 வழக்கு உட்பட 150 வழக்குகள் பதிய வேண்டும் என்றும் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.