பெங்களூரு : ‘கல்வியின் தரத்தை மேம்படுத்த, அனைத்து துறையின் ஒவ்வொரு அதிகாரியும், அரசு பள்ளியோ அல்லது பி.யு., கல்லுாரியையோ தத்தெடுக்க வேண்டும்’ என பள்ளிக்கல்வி மற்றும் எழுத்து அறிவித்தல் துறை முதன்மை செயலர் செல்வகுமார் உத்தரவிட்டுள்ளார்.கர்நாடகாவில் 47 ஆயிரம் அரசு பள்ளிகளும், 1,200 அரசு பி.யு., கல்லுாரிகளும் உள்ளன. எஸ்.எஸ்.எல்.சி., – பி.யு.., தேர்வில் பல பள்ளி, கல்லுாரிகள் பின்னடைவை சந்திக்கின்றன.
இந்நிலையில், பள்ளிக்கல்வி மற்றும் எழுத்து அறிவித்தல் துறை முதன்மை செயலர் செல்வகுமார் வெளியிட்டுள்ள சுற்றிக்கை:மாணவர்களின் கல்வியின் தரத்தை மேம்படுத்தவும், அந்தந்த நிறுவனத்தின் விரிவான கல்வி வளர்ச்சிக்கும் பாடுபட வேண்டும். எனவே, கல்வி துறை அதிகாரிகள் மட்டுமின்றி, மாவட்ட, தாலுகாவின் அனைத்து துறையின் ஒவ்வொரு அதிகாரியும், அரசு பள்ளி அல்லது பி.யு., கல்லுாரியை தத்தெடுக்க வேண்டும். தத்தெடுத்த பள்ளி, கல்லுாரிக்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும். பின், தேவையான அறிவுரைகள் வழங்க வேண்டும்.
மேலும், மாணவர்களுடன் அதிகாரிகள் கலந்துரையாடி, அவர்களின் விருப்பம், வாழ்க்கையின் லட்சியத்தை அடைய வழிகாட்ட வேண்டும்.எந்த அதிகாரி, எந்த பள்ளி, கல்லுாரியை தத்தெடுக்க வேண்டும் என்பதை, கல்வி துறை ஆணையர் மற்றும் பொது கல்வி துறை இயக்குனர் உத்தரவிடுவார். குறிப்பாக, கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் கவனம் செலுத்த வேண்டும்.மாவட்ட அளவில் கல்வி துறை மற்றும் பி.யு., துறையின் துணை இயக்குனர்கள், மாவட்ட கலெக்டர்கள், ஜில்லா பஞ்சாயத்து முதன்மை அதிகாரிகள் மற்றும் பிற அதிகாரிகள், நோடல் அதிகாரிகளாக இருப்பர். மேலும் மாதந்தோறும் அறிக்கைகள் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement