கடந்த 20-7-2022 அன்று இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 6 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது குறித்தும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும், மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர்கள் இலங்கை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எடுத்தியுள்ளார்.
அந்த கடிதத்தில், தற்போது தமிழகத்தைச் சேர்ந்த 92 மீன்பிடிப் படகுகள் இலங்கை வசம் உள்ளதாகவும், அவற்றில் சில படகுகள் 2018 ஆம் ஆண்டில் சிறைபிடிக்கப்பட்டதால், அவை முற்றிலும் சேதம் அடையக்கூடும் எனத் தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், படகின் உரிமையாளர்கள் இலங்கை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, அவர்களது படகிற்கான உரிமையைக் கோர வேண்டுமென்ற நிபந்தனையின் பேரில், கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர் என்றும், தற்போது இலங்கையில் நிலவும் சூழ்நிலை காரணமாக அவர்களால் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும், மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர்கள் இலங்கை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி
1/2 pic.twitter.com/LQETNNaiYA
— CMOTamilNadu (@CMOTamilnadu) July 25, 2022
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க இந்திய அரசின் உயர்மட்ட அளவில் உறுதியான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கையை கோருவதாகவும், இலங்கையில் தற்போது நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, மீன்பிடிப் படகின் உரிமையாளர்கள், இலங்கை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க தாம் வலியுறுத்துவதாகவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இக்கடிதத்தில், கடந்த சில மாதங்களில் கைது செய்யப்பட்ட 18 மீனவர்களை சொந்த நாட்டுக்கு அழைத்துவர உதவியதற்கு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.