புதிய சிலிண்டர்களுக்காக 10 இலட்சம் பேர் காத்திருப்பு  

லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களை புதிதாக கொள்வனவு செய்ய காத்திருப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 10 இலட்சம் என்று அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

இந்த புதிய வாடிக்கையாளர்களின் தேவையை நிறைவேற்றுவதற்காக இந்த ஆண்டில் (2022) ஆரம்பத்தில் 12.5 கிலோ கிராம் மற்றும் 2.3 கிலோ கிராம் எடையுள்ள ஏழு இலட்சத்து முப்பத்தைந்தாயிரம் வெற்று எரிவாயு சிலிண்டர்களை இறக்குமதி செய்ய பெறுகை பத்திரங்கள் கோரப்பட்ட போதிலும், கொள்வனவு செய்யப்படாததால் அதனை இரத்து செய்ய தீர்மானித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

எவ்வாறாயினும், தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு புதிதாக அந்நியச் செலாவணியை செலவிடும் எந்த ஒரு திட்டமும் ஆரம்பிக்கப்பட மாட்டாது என்று லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

 

எனவே, இது தொடர்பாக பின்னர் ஆராய்ந்து, தற்போதுள்ள பற்றாக்குறையை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை, நாட்டில் தற்போது லிட்ரோ எரிவாயுவைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சுமார் 60 இலட்சம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.