தற்போது பெரிதும் பேசப்படுகின்ற குரங்கு அம்மை நோய் ஒரு புதிய நோய் அல்ல என்றும் 1970 ஆம் ஆண்டு மேற்கு ஆபிரிக்க நாடுகளில் இது முதன்முதலில் பதிவாகியதாகவும் தொற்றுநோயியல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சமித கினிகே குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இது அதிபயங்கரமான தொற்றுநோய் நிலை என்று தெரிவிக்கப்படவில்லை, கடந்த சில மாதங்களில் ஒரே நேரத்தில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து நோயாளிகள் பதிவாகியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக சருமத்தில் (முகம், கைகால், வாய்) கொப்புளங்கள், காய்ச்சல், நிணநீர்க் குழாய்களில் வீக்கம், உடல் சோர்வு போன்றவை இதன் அறிகுறிகளாகும். இதற்கு தேவையற்ற விதத்தில் அச்சம் கொள்ள வேண்டாம். மேலும் ஒப்பீட்டளவில், இது கொவிட் போன்று பெரிய அளவில் பரவுவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
ஒரு தொற்றாளரால் இன்னொருவருக்கு மாத்திரமே இந்த நோய் பரவக்கூடும். மேலும் இது சமூகத்தில் வேகமாகப் பரவக்கூடியதும் அல்ல ஆபத்தானதும் அல்ல. நோய் தொற்றுள்ள ஒருவருடன் நெருங்கிப் பழகக் கூடியவர்களுக்கு மாத்திரமே இந்த தொற்று ஏற்படக்கூடும் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இதுவரையிலும், தெற்காசியாவில் மூன்று நோயாளர்கள் மாத்திரமே பதிவாகியுள்ளனர். இதற்கான சுகாதார கட்டமைப்பு அமைப்பு தயார்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனறும் விசேட வைத்திய நிபுணர் சமித்த கினகே மேலும் தெரிவித்துள்ளார்.