சோனியா காந்தியிடம் விசாரணை நிறைவு – 12 மணி நேரத்தில் 100 கேள்விகள்!

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத் துறையினர் நடத்திய விசாரணை இன்றுடன் நிறைவு பெற்றது.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் நடைபெற்ற சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக, அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக, கடந்த மாதம், டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியிடம் தொடர்ந்து ஐந்து நாட்கள் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணை நடைபெற்ற ஐந்து நாட்களில், அவரிடம், 150 கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், அதற்கு அவர், பொறுமையாக பதில் அளித்ததாகவும் தகவல் வெளியாகியது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, காங்கிரஸ் கட்சி இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியிடம், அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களாக விசாரணை நடத்திய நிலையில், இன்றும் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர்.

இதன்படி, இன்று காலை விசாரணைக்கு ஆஜரான சோனியா காந்தியிடம், சுமார் 3 மணி நேரம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். செவ்வாய்க் கிழமையான நேற்று 6 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று 3 மணி நேரம் மட்டுமே விசாரணை நடைபெற்றது.

கடந்த 3 நாட்களையும் சேர்த்து, சோனியா காந்தியிடம், 12 மணி நேரம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர். அவரிடம் 100 கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், அதற்கு அவர் விரைவாக பதில் அளித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மற்றும் யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றுடன் உள்ள தொடர்பு குறித்து, சோனியா காந்தியிடம் கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. விசாரணை நடைபெற்ற மூன்று நாட்களும், அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு, தனது மகள் பிரியங்கா காந்தியுடன், சோனியா காந்தி அலுவலகத்திற்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.