பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் பைக் டாக்சி டிரைவர்கள் பணிபுரிந்து வருகின்றனர் என்பது பலர் அறிந்ததே. இவர்களுக்கு நல்ல வருமானம் வருகிறது என்பதும் பெரிய நகரங்களில் இது ஒரு முழுநேர தொழிலாகவே பலரால் பார்க்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் பெங்களூரு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரியும் ஒருவர் வார இறுதி நாட்களில் பைக் டாக்சி டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
அவர் இந்த பணியை ஏன் செய்கிறார் என்ற காரணம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
சாப்ட்வேர் இன்ஜினியர்
சாப்ட்வேர் இன்ஜினியர் பணி என்பது ஒரு மன ரீதியிலான அழுத்தத்தை கொடுக்கும் பணி என்பது அனைவரும் அறிந்ததே. வேலை பார்க்கும் 8 மணி நேரமும் கம்ப்யூட்டருடனும் தொழில்நுட்பங்களுடன் போராட வேண்டும் என்பதும் மூளைக்கு ஒரு ரிலாக்ஸ் என்பதே இருக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மன அழுத்தம்
ஒரு நிறுவனத்தில் 100 பேர் வேலை பார்த்தாலும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வது என்பது மிகவும் அரிது என்பது தான் இன்றைய பல ஐடி நிறுவனங்களின் நிலைமையாக உள்ளது. இதன் காரணமாக பல ஐடி தொழிலாளர்கள் மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர் என்பதும், மனம் விட்டு பிறரிடம் பேசுவதற்கு நேரமில்லை, அப்படியே நேரம் இருந்தாலும் நாம் பேசுவதை கேட்க ஆள் இல்லை என்பது அவர்களின் நிலையாக உள்ளது.
பைக் டாக்சி டிரைவர்
இந்த நிலையில் பெங்களூரில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரியும் ஒருவர் பொதுமக்களிடம் அதிகம் பேச வேண்டும் என்பதற்காகவே பைக் டாக்சி பணியை வார இறுதி நாட்களில் செய்து வருகிறார். அவர் தனது வாடிக்கையாளரிடம் பைக் ரைடிங் செல்லும்போது அவர் சேர வேண்டிய இடம் வரை பேச்சு கொடுத்து வருகிறார் என்பதும் இதன் மூலம் தனது மன அழுத்தத்தை போக்கி கொள்வதாகவும் கூறியுள்ளார்.
மனம் விட்டு பேசுதல்
இது குறித்து நிகில் சேத் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்த போது ‘நான் பைக் டாக்சியில் பயணம் செய்த போது தற்செயலாக டிரைவர் என்னிடம் பேச்சு கொடுத்தார் என்றும், அவருடன் மனம்விட்டு பேசும்போது அவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார் என்றும், பல லட்சம் சம்பளம் வாங்கும் பணியாளர் என்பது தெரியவந்ததும் அசந்துவிட்டேன் என்றும் பதிவு செய்திருந்தார்.
பேசுவதால் குறையும் மன அழுத்தம்
இதைவிட அவர் இந்த பணியை ஏன் செய்கிறார் என்ற காரணத்தை கூறியபோது நான் ஆச்சரியத்தின் உச்சத்திற்கே சென்று விட்டேன் என்றும் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார், தான் பணிபுரியும் ஐந்து நாட்களும் யாரிடமும் பேசுவதற்கு நேரமில்லை என்றும், அதனால் வார இறுதி நாட்களில் பொதுமக்களிடம் தாராளமாக மனம் விட்டு பேசுவதற்காகவே இந்த பைக் டாக்சி டிரைவர் பணியை செய்கிறேன் என்றும் எனது வாடிக்கையாளருடன் நான் மனம் விட்டு பேசுவதால் எனது மன அழுத்தம் குறைகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
டாக்சி டிரைவரான தொழிலதிபர்
நிகில் சேத் அவர்களின் இந்த பதிவிற்கு ஒரு சில மணி நேரத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்தது எனவும் லட்சக்கணக்கானோர் இந்த பதிவுக்கு கமெண்ட்ஸ்களை பதிவு செய்தனர் என்றும் கூறப்படுகிறது. ஒரு ட்விட்டர் பயனாளி தான் ஒருமுறை வாடகை காரில் பயணம் செய்து கொண்டிருந்த போது அந்த காரை ஓட்டும் டிரைவர் ஒரு தொழிலதிபர் என்று தெரிய வந்ததாகவும், தனது குழந்தைகள் தன்னிடம் பேசுவதில்லை என்றும் அதனால் பிறரிடம் மனம் விட்டுப் பேச வேண்டும் என்பதற்காகவே வாடகை கார் ஓட்டுகிறேன் என்று அவர் கூறியதும் நான் ஆச்சரியம் அடைந்தேன் என்று தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
மன நல ஆய்வாளர்கள்
முன்பெல்லாம் நண்பர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைவார்கள். ஆனால் தற்போது மொபைல் போன், கம்ப்யூட்டர், இண்டர்நெட் போன்ற தொழில்நுட்பம் வந்தபிறகு பக்கத்தில் இருந்தால் கூட ஒருவரோடு ஒருவர் மனம் விட்டு பேசுவது என்பதே அரிதாகி விட்டது. இது நாளடைவில் மன நோய்க்கு கொண்டு சென்றுவிடும் என்றும், இது போன்ற மன அழுத்தத்தை தவிர்க்க நண்பர்களிடமும், உறவினர்களிடம் பேசுவதற்கும் குறைந்தபட்ச நேரமாவது ஒதுக்க வேண்டும் என்பதே மனநல ஆய்வாளர்களின் ஆலோசனையாக உள்ளது.
Bengaluru software engineer works as a Rapido driver in his free time. You know the surprise reason!
Bengaluru software engineer works as a Rapido driver in his free time. The reason will surprise you | பைக் டாக்சி டிரைவராக பணிபுரியும் சாப்ட்வேர் எஞ்சினியர்.. காரணத்தை கேட்டால் அசந்துவிடுவீர்கள்!