வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஆந்திரா மற்றும் தமிழக கடலோரப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, மதுரை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், கரூர், நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

29-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், கரூர் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலும், 30-ம் தேதி கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், கரூர், நாமக்கல் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களிலும், 31-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, கரூர், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக் கூடும்.

27-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டில் 13 செமீ., உளுந்தூர்பேட்டை, திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஆகிய இடங்களில் தலா 12 செமீ., கடலூர் மாவட்டம் வேப்பூரில் 11 செமீ. மழை பதி வாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.