2 சிறுமிகளை சீரழித்த 8 குழந்தைகளின் தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை ..! போக்சோ வழக்கில் அதிரடி

இரு சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 8 குழந்தைகளின் தந்தையை வாழ்நாள் முழுவதும் சிறைக்குள் அடைக்கும் வகையில் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி திருவண்ணாமலை போக்சோ நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்தவர் பட்டு என்கிற வெங்கடேசன். ஆட்டோ ஓட்டுனரான இவருக்கு 3 மனைவிகள், 8 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு தனது 2 வது மனைவி வீட்டில் தனது 12 வயது மகள் மற்றும் அதே வயதுடைய மனைவியின் தங்கையான சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக வெங்கடேசனின் மனைவி ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் பட்டு என்கிற வெங்கடேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து சிறை தண்டனை அனுபவித்து வரும் வெங்கடேசனின் வழக்கு திருவண்ணாமலை போக்ஸோ நீதிமன்றத்தில் செவ்வாய்கிழமை விசாரணைக்கு வந்தது, வழக்கினை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி குற்றவாளியான பட்டு என்கிற வெங்கடேசனுக்கு சாகும்வரை சிறையில் அடைக்கும் படி இரட்டை ஆயுள் தண்டனையுடன், 3000 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து பட்டு என்கிற வெங்கடேசனை போலீசார் வேலூர் சிறையில் அடைத்தனர். வெறிபிடித்த மிருகம் போல சுற்றி சமூகத்தில் உள்ள பிஞ்சுகளை நாசமாக்கும் இவனை போன்றவர்கள் நிரந்தரமாக சிறையில் இருப்பதே நல்லது என்று இந்த தீர்ப்பை அவரது 2 வது மனைவி குடும்பத்தினர் வரவேற்றுள்ளனர் ..!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.