“நேற்று முதல்வரின் நடத்தை…” – திமுக – பாஜக கூட்டணி கேள்விக்கு அண்ணாமலையின் பதில்

சென்னை: செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை இந்தியாவின் கலாச்சாரத்தை, பெருமையை பறைசாற்றும் விதமாக தமிழக அரசு பயன்படுத்திக்கொண்டது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா மற்றும் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். சென்னை நேரு விளையாட்டரங்கில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்த அவர், ஆளுநர் மாளிகையில் ஓய்வு எடுத்துவருகிறார். முன்னதாக செஸ் போட்டி தொடக்க விழா முடிந்ததும் ராஜ் பவன் வந்த பிரதமருக்கு ஆளுநர் ஆர்என் ரவி புத்தகம் கொடுத்து வரவேற்றார்.

தொடர்ந்து பிரதமர் மோடி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகளை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்பது தொடர்பாக அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து கூறினார். அதில், “பாஜகவின் மூத்த நிர்வாகிகள், ஜன சங்கம் காலம் தொட்டு பணியாற்றி வருபவர்கள் இங்கே வந்து பிரதமரை சந்தித்தனர். இந்த சந்திப்பில் அரசியல் எதுவும் பேசப்படவில்லை. அரசியல் பேசுவதற்கு தற்போது தமிழகத்தில் தேர்தல் எதுவும் நடக்கவில்லை. தகுந்த நேரங்கள் வரும்போது நிச்சயமாக அரசியல் பேசுவோம். எனினும், இன்று அரசியல் பேசவில்லை” என்றார்.

அப்போது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் பிரதமருடன் இணக்கம் காண்பித்ததை தொடர்ந்து திமுக – பாஜக கூட்டணிக்கு வாய்ப்புண்டா என்ற கேள்வி அண்ணாமலையிடம் முன்வைக்கப்பட்டது. அதற்கு, “பாஜக ஒரு கொள்கை ரீதியான கட்சி. தன்னுடைய கொள்கையை பாஜக எப்போதும் மாற்றிக்கொள்ளாது. கடந்தமுறை பிரதமர் சென்னை வந்தபோது நடந்த சம்பவங்களை வைத்து ‘முதல்வர் பெரிய மனோதோடு நடந்துகொண்டிருக்க வேண்டும். அரசு விழா என்பது அரசியல் பேசுவதற்கான களம் கிடையாது’ என்று நானே ஊடகங்களிடம் பேசினேன்.

ஆனால், இப்போது நான் முதல்வரை பாராட்டுகிறேன். நேற்றைய நிகழ்ச்சியை இந்தியாவின் கலாச்சாரத்தை, பெருமையை பறைசாற்றும் விதமாக தமிழக அரசு பயன்படுத்திக்கொண்டது. நேற்று முதல்வரின் நடத்தைக்கு எங்களின் பாராட்டுக்கள். அதனால் முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் தமிழக பாஜகவின் தனிப்பட்ட பாராட்டுக்கள். என்றாலும் ஒரு நிகழ்ச்சியை நன்றாக செய்துள்ளார்கள் என்பதை பாராட்டியதற்காக கூட்டணி என்றெல்லாம் கிடையாது. கூட்டணி என்ற பேச்சே இல்லை. முதல்வர் ஸ்டாலின் நேற்று தனது பேச்சில், செயலில் முதல்வராக நடந்துகொண்டார். ஒரு தமிழனாக நேற்று நாம் பெருமைப்பட்டோம்” என்று பதில் கொடுத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.