பிரதமர் மோடியின் 2 நாள் தமிழக சுற்றுப் பயணம்: வரவேற்ற இபிஎஸ்… வழியனுப்பிய ஓபிஎஸ்

சென்னை: இரண்டு நாள் தமிழக சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு அகமதாபாத் திரும்பும் பிரதமர் நரேந்திர மோடியை வழியனுப்பும் நிகழ்வில் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார்.

பிரதமர் நரேந்திர மோடி, 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா மற்றும் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக இரண்டு நாள் சுற்றுப் பயணமாக தமிழகம் வந்திருந்தார். சென்னை வந்த பிரதமரை தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி,கே.என்.நேரு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் வரவேற்றனர். பாஜக சார்பில் வானதி சீனிவாசன் வரவேற்றார். அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி பூங்கொத்து வரவேற்றிருந்தார்.

இந்நிலையில், நேற்று நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்குப் பின்னர், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பிரதமர் இரவு தங்கினார். அதிமுகவில் ஏற்பட்ட ஒற்றைத் தலைமை பிரச்சினையைத் தொடர்ந்து இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பில் பிரதமர் மோடியைச் சந்திப்பதற்கான பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக, தமிழகம் வரும் பிரதமரை சந்திக்க இரண்டு தரப்பும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டன. ஆனால், அதுபோன்ற சந்திப்புகள் எதுவும் நடைபெறவில்லை.

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த 42-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி தலைமை விருந்தினராக கலந்துகொண்டார். விழாவுக்குப் பின்னர், அங்கிருந்து சாலை மார்க்கமாக சென்னை விமான நிலையம் சென்றடைந்தார். பிரதமரை வழியனுப்புவதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக நிர்வாகிகள் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். இந்த நிகழ்வில் ஓ.பன்னீர்செல்வமும் கலந்துகொண்டார்.

ஏற்கெனவே அதிமுக தலைமை தொடர்பாக கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சினையைத் தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பில் டெல்லியில் பிரதமரைச் சந்தித்து பேச வாய்ப்பு கிடைக்காத நிலையில், சென்னையிலும் இருதரப்புக்கும் வாய்ப்பு கிடைக்காதது, ஓபிஎஸ் – இபிஎஸ் தரப்பினரிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.