அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு: ஐகோர்ட்டில் முறையிட உச்ச நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கடந்த 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவை ரத்து செய்ய வேண்டும் என்ற ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. அதிமுகவில் யாருக்கு அதிகாரம், ஒற்றைத் தலைமை விவகாரம் ஆகிய பிரச்னை உச்சம் தொட்டுள்ள நிலையில் கடந்த 11ம்தேதி நடந்த பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி அமர்வு, பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளதால் பொதுக்குழுவை நடத்தலாம். உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. சட்டப்படி பொதுக்குழுவை நடத்திக்கொள்ளலாம். விதிகளை மீறினால் நீதிமன்றத்தை நாடலாம் என தீர்ப்பு வழங்கி இருந்தது. இதையடுத்து கடந்த 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடந்தது. தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை தொடர்ந்து, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு, எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த கேவியட் மனுக்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா மற்றும் நீதிபதிகள் கிருஷ்ணா முராரி, ஹேமா கோலி ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான குரு கிருஷ்ணகுமார் வாதத்தில், “அதிமுக அடிப்படை விதிகள் மொத்தமும் மீறப்பட்டுள்ளது. அதனால் கடந்த 11ம் தேதி நடந்த பொதுக்குழுவை சட்டவிரோதம் என அறிவித்து முடிவுகளை ரத்து செய்ய வேண்டும்’’ என தெரிவித்தார். எடப்பாடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன், ராக்கேஷ் துவேதி மற்றும் சி.எஸ்.வைத்தியநாதன் வாதத்தில், “எங்களது தரப்புக்கு தான் அதிகப்படியான பெரும்பான்மை உள்ளது. அதனால்தான் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சில மாதங்களில் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்கள் தேர்வின் மூலம் நிரந்தர பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படும்’’ என்றனர். இதையடுத்து, “இந்த விவகாரத்தை பொறுத்தமட்டில் அனைத்தையும் முந்தைய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என உத்தரவிட முடியாது. முன்னதாக தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டிய சூழல் உள்ளது. அதனால் வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுகிறோம். 2, 3 வாரத்தில் இதுகுறித்த விசாரணையை முடிக்க உத்தரவிடுகிறோம். வழக்கில் இறுதி உத்தரவு வரும் வரையில் அதிமுக கட்சியில் தற்போது இருக்கும் நிலையே தொடர வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். அப்போது குறுக்கிட்ட ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர், ஜூலை 11க்கு முன்பு உள்ள நிலை தொடர வேண்டும் என உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால் அந்த கோரிக்கையை தலைமை நீதிபதி என்.வி.ரமணா நிராகரித்து விட்டார்.ஒன்றுசேர மாட்டோம்வழக்கு விசாரணை நேற்று நடந்துகொண்டிருந்த போது, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் மீண்டும் ஒன்று சேருவார்களா என தலைமை நீதிபதி என்.வி.ரமணா, இரு தரப்பு வழக்கறிஞர்களிடமும் கேட்டார். அதற்கு பதிலளித்த அவர்கள் ஒன்று சேர வாய்ப்பே கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்தனர்.சாதக, பாதகம் என்ன?அதிமுக கட்சி விவகாரத்தில் உயர் நீதிமன்றம் விசாரித்து இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரையில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவினால், இரு தரப்பும் ஒருவரை ஒருவர் கட்சியில் நீக்குவதோ, அல்லது புதிய பதவிகளை உருவாக்குவதோ முடியாது. குறிப்பாக எடப்பாடி பழனிசாமியை பொறுத்தமட்டில் மூன்று மாதத்தில் பொதுக்குழு தேர்தல் நடத்தப்படும் என கடந்த 11ம் தேதி நடந்த கூட்டத்தில் தெரிவித்தார். அதனால் அவர் தற்போது இருக்கும் நிலையில் பொதுக்குழு தேர்தல் தொடர்பான அறிவிப்பை கூட வெளியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.