கவுகாத்தி: அசாமில் இருந்து புறப்பட்ட இண்டிகோ விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி அருகில் இருந்து புல்வெளி சேற்றில் சிக்கியதால் பயணிகள் பதற்றமடைந்தனர். அசாமின் ஜோர்ஹாட்டில் இருந்து கொல்கத்தாவிற்கு நேற்று முன்தினம் இண்டிகோ விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 98 பயணிகள் அமர்ந்து இருந்தனர். விமானம் புறப்பட தயாரானபோது ஓடுபாதையில் இருந்து விலகியது. இதனால் அருகில் இருந்த புல்வெளியின் சேற்றில் விமானத்தின் சக்கரங்கள் சிக்கின. இதைப் பார்த்து பயணிகள் அலறினர். விமானி உடனடியாக விமானத்தை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து விமானம் ரத்து செய்யப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் ஓடுபாதையில் இருந்து விலகியதாக கூறப்படுகின்றது.