உலகளாவிய நிதியளிப்புக்கு வழிகாட்டும் அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர் நாடுகளின் வரிசையில் இப்போது இந்தியாவும் இணைந்துள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் காந்திநகரில் பன்னாட்டு நிதிச் சேவை மையங்கள் ஆணையத்தின் தலைமையகக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டியதுடன், பன்னாட்டுத் தங்கம் வெள்ளிச் சந்தையையும் தொடக்கி வைத்தார். என்எஸ்இ – ஐஎப்எஸ்சி – சிங்கப்பூர் பங்குச்சந்தை ஆகியவற்றை இணைக்கும் தளத்தையும் அவர் தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றும், சாதனை அளவில் இந்தியாவுக்கு வெளிநாட்டு முதலீடுகள் வந்துள்ளது என்றார். இருபத்தோராம் நூற்றாண்டில் நிதியும் தொழில்நுட்பமும் ஒவ்வொருவரையும் இணைப்பதாக கூறினார்.
உலகின் மின்னணுப் பணப் பரிமாற்றத்தில் 40 விழுக்காட்டை இந்தியா மட்டும் கொண்டிருப்பதாகவும், கடந்த எட்டாண்டுகளில் ஏழைகளும் வங்கி அமைப்புகளுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.