மேற்கு வங்கத்தில் பாஜக-வின் `ஆட்டம்’ ஆரம்பம்?! – மம்தாவின் எச்சரிக்கைக்கு என்ன காரணம்?

பஞ்சாப், கர்நாடகா, பாண்டிச்சேரி, மகாராஷ்ட்ரா போன்ற பதினைந்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில், அங்கிருந்த மாநிலக் கட்சிகளுக்குள் உட்புகுந்து, அவர்களுக்குள் இருக்கும் முரண்களைக் கையாண்டு; அந்த கட்சிகளைக் காணாமல் செய்து; பாஜக-வினை வளர்த்தெடுக்க, அந்த தலைவர்களை எல்லாம் பாஜகவின் தலைவர்களாக மாற்றியதோ, அதே போன்றதொரு தலைமையை மேற்கு வங்கத்திலும் பா.ஜ.க அமைக்குமா? அதற்கு மேற்கு வங்க அரசியல் களம் கைகொடுக்குமா? என்கிற கேள்விகள் மேற்கு வங்க அரசியல் சூழலில் எதிரொலித்து வருகிறது.

மேற்கு வங்கத்தின் தற்போதைய தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சராக இருக்கும் பார்த்தா சாட்டர்ஜி, இதற்கு முன்பு கல்வித்துறை அமைச்சராக இருந்தார். அப்போது பள்ளி சேவை ஆணையத்தால் (WBSSC) அரசு நடத்தும் உதவி பெறும் பள்ளிகளில் சட்டவிரோத நியமனங்கள் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஆசிரியர் பணி நியமன ஊழல் தொடர்பாக, பார்த்தா சாட்டர்ஜியின் உதவியாளர் அர்பிதா முகர்ஜியின் வீட்டில் அமலாக்க இயக்குநரகம் சோதனை நடத்தியது. அப்போது ரூ. 2,000 மற்றும் ரூ. 500 நோட்டுக் கட்டுகள் மீட்கப்பட்டுள்ளன. இதனையடுத்து அர்பிதா முகர்ஜியின் வளாகத்திலிருந்து 20-க்கும் மேற்பட்ட மொபைல் போன்கள் மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக அமலாக்க இயக்குநரகம், “இந்தத் தொகை WBSSC ஊழல் குற்றத்தின் வருமானமாகச் சந்தேகிக்கப்படுகிறது” என்று தெரிவித்திருக்கிறது.

பார்த்தா சாட்டர்ஜி

இதில், சாட்டர்ஜியைத் தவிர, கல்வித்துறை இணை அமைச்சர் பரேஷ் சி அதிகாரி, எம்.எல்.ஏ மாணிக் பட்டாச்சார்யா மற்றும் பலர் மீதும் சந்தேகத்தின் அடிப்படையில் ED சோதனை நடத்தியிருக்கிறது. இந்த விசாரணைக்கு அவர் ஒத்துழைக்கவில்லை என்பதால் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கைது செய்யப்பட்டார். இது அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து உடல்நலக்குறைவு காரணமாகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இது தொடர்பாக மம்தா பானர்ஜி, “நாட்டின் முன்னணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சாட்டர்ஜியை அங்கிருந்து மத்திய அரசோடு தொடர்புடைய மருத்துவமனைக்கு ஏன் கொண்டு சென்றீர்கள்… உங்கள் நோக்கம்தான் என்ன… மேற்கு வங்க மக்களை அவமானப்படுத்தவா… என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்… மத்திய அரசு அப்பாவி, மாநிலங்கள் திருடர்களா… மாநிலங்களால்தான் நீங்கள் அங்கு இருக்கிறீர்கள்…!” என்று கேள்விகளை அடுக்கிய மம்தா, “மகாராஷ்டிராவால் இந்த முறை எதிர்த்துப் போராட முடியாமல் போயிருக்கலாம். மகாராஷ்டிராவுக்குப் பிறகு சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் என அவர்கள் (பா.ஜ.க) சொல்கிறார்கள். இங்கு வர முயன்று பாருங்கள். வங்காள விரிகுடாவைக் கடக்க நினைத்தால் உங்களை முதலைகள் கடிக்கும். சுந்தர்பன் விலங்கியல் பூங்காவிலுள்ள ராயல் புலிகள் கடிக்கும். வடக்கு வங்காளத்தில் யானைகள் உங்களை விரட்டும்” என்று எச்சரித்துள்ளார்.

மம்தா, மோடி

மேலும், “ஊழல் அல்லது வேறு எந்தத் தவற்றுக்கும் நான் துணை போக மாட்டேன். திருடனாக இருந்தாலும், கொள்ளைக்காரனாக இருந்தாலும் யாரையும் விட மாட்டேன். என் சொந்தக் கட்சியினரையே கைது செய்திருக்கிறேன். எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் மற்றும் அமைச்சர்களைக்கூட விட்டுவைப்பதில்லை. மத்திய விசாரணை ஏஜென்சிகளை வைத்து எங்கள் கட்சியை உடைத்துவிடலாம் என்று பா.ஜ.க நினைத்தால் அது தவறு. உண்மை வெளிச்சத்துக்கு வரும்” என்று தன் கருத்தைத் தெரிவித்துள்ளதோடு, “2024-ஆம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சிக்கு வரவே வராது என்பது எனது நம்பிக்கை. இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 40% அதிகரித்து உள்ளது. ஆனால், வங்காளத்தில் அது 45% குறைந்துள்ளது. தற்போது, ஊடகங்கள் வழியே ஒருவரின் மதிப்பை சீர்குலைக்கும் வேலைகள் நடந்து வருகின்றன. மக்களைக் குற்றவாளிகள் என கூறி வருகின்றனர். வங்காளம் மோசமடைந்து உள்ளது என்ற தோற்றத்தினை ஏற்படுத்த அவர்கள் (பா.ஜ.க) விரும்புகிறார்கள்” என்று கூறியுள்ளார்.

இதற்குப் பதிலடி தரும் வகையில், “திரிணாமுல் காங்கிரசின் 38 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுடன் தொடர்பில் உள்ளனர்” என நடிகர் மற்றும் அக்கட்சி உறுப்பினரான மிதுன் சக்ரவர்த்தி கூறியுள்ளார்.

மிதுன் சக்ரவர்த்தி

இதனால், மராட்டியத்தில் ஷிண்டே அணி சிவசேனாவில் இருந்து தனியாகப் பிரிந்து, தற்போது பா.ஜ.க. கூட்டணியுடன் ஆட்சி நடந்து வருவது போன்ற சூழல் ஏற்படலாம் என்கிற கருத்தும் மேற்கு வங்கத்தில் வலுத்து வருகிறது.

மிதுன் சக்ரவர்த்தியின் கருத்திற்குப் பதில் அளிக்கும் வகையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாந்தனு சென், “ஒரு சில நாள்களுக்கு முன் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என எனக்கு தெரிய வந்தது. அவருக்கு உடல்ரீதியாகப் பாதிப்பு எதுவும் இல்லை. அவருக்கு ஏற்பட்டிருப்பது மனநல பாதிப்பு என நான் நினைக்கிறேன். பிரச்னை என்னவெனில், அவருக்கு அரசியல் பற்றி தெரியாது” என்று கூறியுள்ளார்.

எம்.பி. சாந்தனு சென்

இதுபோன்ற காரசார வாக்குவாதங்கள் இரு கட்சிகளுக்கு இடையே நீடித்து வரும் வேலையில், திரிணாமுல் காங்கிரசின் பொதுச் செயலாளர் குணால் கோஷ் தனது ட்விட்டர் பதிவில், “திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சகத்திலிருந்து பார்த்தா சாட்டர்ஜியை உடனடியாக நீக்குவதுடன், அனைத்து கட்சி பதவிகளிலிருந்தும் அவரை நீக்க வேண்டும்.

பொதுச்செயலாளர் குணால் கோஷ்

அவர் கட்சியிலிருந்தே வெளியேற்றப்பட வேண்டும். எனது இந்த அறிக்கை தவறானது எனப் பரிசீலிக்கப்பட்டால், பின்னர் கட்சியானது அனைத்து பதவிகளிலிருந்தும் என்னை நீக்குவதற்கு எல்லா உரிமையும் உள்ளது” எனப் பதிவிட்டுள்ளது மேற்கு வங்க அரசியலில் இப்போது பரபரப்பாக்கியுள்ளது.

அமித் ஷா

ஹைதராபாத்தில் நடைபெற்ற பா.ஜ.க தேசிய செயற்குழு கூட்டத்தில், “தெலங்கானா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் குடும்ப ஆட்சி நடைபெறுகிறது. இந்த குடும்ப ஆட்சிக்கு பாஜக விரைவில் முடிவு கட்டும்” என்று அமித் ஷா கூறியிருந்தது நினைவுக்கூரத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.