விசாகப்பட்டினத்தில் திருமண நாளை கொண்டாட கணவருடன் கடற்கரைக்கு வந்த மனைவி திடீர் மாயம்

*கடலில் அடித்து சென்றதாக புகார்*ஹெலிகாப்டர், படகுகளில் தேடிய அதிகாரிகள்*காதலனுடன் சென்றது அம்பலம்திருமலை : விசாகப்பட்டினத்தில் திருமண நாளை கொண்டாட கணவருடன் கடற்கரைக்கு வந்த மனைவி கடல் அலையில் அடித்து சென்றதாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஹெலிகாப்டர் மற்றும் படகுகளில் அதிகாரிகள் தேடினர். இதற்கிடையே காதலுடன் இளம்பெண் சென்றது தெரியவந்தது. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் சஞ்சீவய்யா நகரை சேர்ந்தவர் சாய் பிரியா. இவருக்கும் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தை சேர்ந்த உறவினரான சீனிவாஸ் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு  முன்பு  பெரியோர்கள் நிச்சயித்து திருமணம் செய்து வைத்தனர். ஆனால், சாய்பிரியா திருமணத்திற்கு முன்பே அதேபகுதியை சேர்ந்த  ரவி என்பவரை காதலித்து வந்துள்ளார். திருமணத்திற்கு பிறகும் அதை தொடர்ந்துள்ளார். இந்நிலையில், தெலங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருந்து உற்பத்தி நிறுவனத்தில் சீனிவாஸ் பணியாற்றி வருகிறார். திருமணத்திற்கு பிறகு சீனிவாஸ் மற்றும் சாய்பிரியா இருவரும்  ஐதராபாத்தில் வாடகை வீட்டில் தங்கி வருகின்றனர். திருமணமாகி 2 ஆண்டு ஆவதால் குடும்பத்துடன் ஊருக்கு செல்ல வேண்டும் என சாய்பிரியா கேட்டுக் கொண்டார். இதையடுத்து, கடந்த 24ம் தேதி சீனிவாஸ், சாய்பிரியாவை விசாகப்பட்டினத்திற்கு அழைத்து வந்தார். 25ம் தேதி மாலை திருமண நாள் என்பதால் சீனிவாஸ் மனைவி சாய்பிரியாவுடன் விசாகப்பட்டினம் கடற்கரைக்கு வந்தார். அங்கு சாய்பிரியா செல்பி எடுத்து கொண்டிருந்தார்.அப்போது, ஸ்ரீனிவாஸ் செல்போனுக்கு அழைப்பு வந்தது. இதனால், அவர் அங்கிருந்து சிறிது தூரம் தள்ளி வந்து செல்போனில் பேசியுள்ளார். பின்னர், மீண்டும் மனைவியை காண சென்றபோது சாய்பிரியா அங்கு இல்லை. இதனால், அதிர்ச்சியடைந்த அவர் செல்பி எடுக்கும்போது கடல் அலையில் அடித்து சென்று இருக்கலாம் என சீனிவாஸ் தனது உறவினர்கள், நண்பர்களிடம் தெரிவித்தார். மேலும், கடற்படை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார். மறுநாள் காலையில் இருந்து படகுகள் மற்றும் கடற்படை ஹெலிகாப்டர் மூலம் அதிகாரிகள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். சாய்பிரியாவை தேட கடற்படை நிர்வாகம் கிட்டத்தட்ட ₹1 கோடி செலவு செய்தது. ஆனால், தேடுதல் முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன. ஆனால் சாய்பிரியா தனது காதலனுடன் சென்றுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சாய்பிரியாவின் ஆடியோ வெளியீடுஇதற்கிடையே, நேற்று முன்தினம் சாய்பிரியாவின் தந்தையின் செல்போனுக்கு ஒரு ஆடியோ மெசேஜ் வந்தது. அதில், சாய்பிரியா பேசுகையில், ‘நான் உயிருடன் இருக்கிறேன். நான் காதலித்து வந்த  ரவியுடன் வந்து விட்டேன். எங்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இதில், ரவி மீது தவறில்லை. ரவி என்னை வலுக்கட்டாயமாக அழைத்து வரவில்லை. இனி எங்களால் எங்கு செல்வது என்று தெரியவில்லை. சாவதோ? உயிர் வாழ்வதோ? இனி ரவியுடன் மட்டுமே. தயவு செய்து எங்களை தேட வேண்டாம். என்னால் ரவியை விட்டு பிரிந்து வாழ முடியாது. பல ஆண்டுகளாக இருவரும் காதலித்து வருகிறோம். எங்களை தேடி யாராவது வந்தாலோ அல்லது நீங்கள் வந்தால் இருவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்வோம்.இருவரும் ஒருவரை பிரிந்து ஒருவர் வாழ முடியாது.  நாங்கள் சாகவேண்டும் என்று நினைக்கவில்லை. உயிர் வாழ வேண்டும் என்று நினைக்கிறேன். தயவு செய்து எங்களை வாழ விடுங்கள். என்னை தேடிய அதிகாரிகளுக்கு எனது மன்னிப்பை தெரிவித்து கொள்கிறேன்’ என ஆடியோ வெளியிட்டுள்ளார். ஆடியோ வந்த  செல்போனின் ஆதாரமாக விசாகப்பட்டிணம் போலீசார் விசாரணை செய்தனர். இதில், சாய்பிரியா மற்றும் ரவி நெல்லூரில் இருப்பது தெரியவந்தது. இருவரையும் விசாகப்பட்டினத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.