கான்பூர்:
கோபித்து கொண்டு தாய் வீட்டிற்கு சென்ற மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வர கல்வித்துறை ஊழியர் ஒருவர் அளித்த விண்ணப்பம் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்களில் விடுமுறை எடுப்பவர்கள் பல்வேறு காரணங்களை கூறி விடுப்பு எடுப்பது வழக்கம். அதில், சிலர் தெரிவிக்கும் காரணங்கள் இணையதளங்கில் வைரலாகும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர், மற்றொரு நிறுவனத்தில் நடக்கும் நேர்முக தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்த கடிதம் வைரலானது.
தற்போது, அதேபோன்று மற்றொரு கடிதம் வைரலாக பரவி வருகிறது. உத்தரபிரதேசம் கான்பூரில் கல்வித்துறையில் பணியாற்றும் ஊழியர் ஷம்ஷாத் அகமது அளித்த விடுமுறை விண்ணப்பத்தில், தனது 3 குழந்தைகளுடன் மனைவி, அவரது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால், மனதளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது கிராமத்தில் இருக்கும் மனைவியை சமாதானப்படுத்தி மீண்டும் தனது வீட்டிற்கு அழைத்து வர விடுப்பு தேவைப்படுகிறது. இதனால் இன்று ஆகஸ்டு 4 முதல் 6 வரை விடுப்பு அளிக்க வேண்டும் எனக்கூறியுள்ளார். இந்த விண்ணப்பம் தான் வைரலாகியுள்ளது.
ஊழியர் ஷம்ஷாத் அகமதுவுக்கு உடனடியாக விடுமுறை அளிக்கப்பட்டது. அந்தக் கடிதம் சமூக வலைதளங்களில் வைரலானவுடன் மக்கள் அந்த எழுத்தரிடம் அனுதாபம் காட்டினார்கள்.
கடிதம் செவ்வாய்கிழமை வைரலாக பரவியதையடுத்து, கல்வித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளனர்.