தைவானை சுற்றிவளைத்து பிரம்மாண்ட போர் பயிற்சி; படையெடுக்கப்போகிறதா சீனா?

பிஜீங்,

சீனாவில் கடந்த 1949-ல் நடந்த உள்நாட்டு போருக்கு பிறகு தைவான் தனி நாடாக உருவானது. ஆனாலும் தைவான் தங்கள் நாட்டின்ஒருங்கிணைந்த பகுதி என அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான சீன அரசு கூறி வருகிறது. அதுமட்டும் இன்றி தேவை ஏற்பட்டால் தைவானை கைப்பற்ற, படை பலத்தை பயன்படுத்த தயங்கமாட்டோம் எனவும் சீனா கூறி வருகிறது. மேலும், தைவானின் வான் எல்லைக்குள் அவ்வப்போது சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்து மிரட்டல் விடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளது.

அதேவேளை, தீவு நாடான தைவானுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது. தைவானுக்கு அதிக அளவில் அமெரிக்கா ராணுவ ஆயுதங்களை வழங்கி வருகிறது. சீனா படையெடுக்கும்பட்சத்தில் தைவானை பாதுகாப்போம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதனிடையே, அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பொலேசி அரசு முறை பயணமாக கடந்த 2-ம் தேதி இரவு தைவானுக்கு சென்றார். அவர் தைவான் அதிபரை சந்தித்து பேசினார். நான்சி பொலேசியின் இந்த பயணம் சீனாவுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

தைவானை இன்னும் அமெரிக்கா சுதந்திர நாடாக முழுமையாக அங்கீகரிக்கவில்லை. ஆனாலும், தைவான் தன்னை தற்காத்துக்கொள்ள ஆயுத உதவிகளை அமெரிக்கா வழங்கி வருகிறது.

இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சியின் தைவான் பயணம் சீனாவிற்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணாமாக தைவான் மீது சீனா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

தைவான் பயணத்தை முடித்துக்கொண்டு நான்சி கடந்த புதன்கிழமை ஜப்பான் புறப்பட்டு சென்றார். நான்சி தைவானை விட்டு புறப்பட்ட உடன் சீனா மிகப்பெரிய போர் பயிற்சியில் ஈடுபட தொடங்கியுள்ளது.

தீவு நாடான தைவானை சுற்றி வளைத்த சீன போர் கப்பல்கள் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஏவுகணைகளை வீசி பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

சீனாவின் ஏவுகணைகள் தைவான் கடற்பரப்பின் எல்லைக்குள் விழுந்துள்ளன. மேலும், சில சீன ஏவுகணைகள் ஜப்பான் கடற்பகுதியில் விழுந்ததால் பதற்றம் மேலும் அதிகரித்துளது.

சீன போர் விமானங்களும் தைவான் எல்லைக்குள் நுழைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது. சீன ராணுவ வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தரைப்படை, விமானப்படை, கடற்படை என முப்படைகளையும் சீனா களமிறக்கியுள்ளது.

இந்த போர்பயிற்சி வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் போர் பயிற்சி தைவான் மற்றும் ஜப்பான் மற்றும் சுற்றியுள்ள நாடுகளில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

அதேவேளை, தைவான் மீது சீனா படையெடுக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. சீனாவின் முப்படைகளும் தைவான் மீது படையெடுத்து அந்நாட்டை கைப்பற்றும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் தென்சீன கடற்பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.