தைவானை தனிமைப்படுத்த அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது: சீனாவுக்கு நான்சி பெலோசி பதிலடி!

டோக்கியோ,

சீனாவிடம் இருந்து பிரிந்துவிட்ட நிலையில் தன்னை தனிநாடாக தைவான் கருதினாலும், சீனா அப்படி நினைக்கவில்லை.

தைவானை மீண்டும் தன்னுடன் இணைத்துக்கொள்ள சீனா துடித்துக்கொண்டிருக்கிறது. ஆனால், கடந்த மே மாதம், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜப்பானுக்கு பயணம் செய்தபோது, “சீனா பலவந்தமாக தைவான் தீவைக் கைப்பற்ற முயற்சித்தால், அமெரிக்கப் படைகள் தைவானை இராணுவ ரீதியாகப் பாதுகாக்கும்” என்று எச்சரித்திருந்தார்.

இதன்காரணமாக தைவான் பிரச்சினையில் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்கிறது.

சீனாவின் கடும் மிரட்டல்களுக்கு மத்தியில், கடந்த 2-ந் தேதி இரவு தைவான் தலைநகர் தைபேவுக்கு, அமெரிக்காவை ஆளும் ஜனநாயக கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற சபாநாயகருமான நான்சி பெலோசி சென்று, அந்த நாட்டின் அதிபர் சாய் இங் வென்னை சந்தித்து, அமெரிக்காவின் உறுதியான ஆதரவைத் தெரிவித்தார்.

இது சீனாவுக்கு அமெரிக்கா மீது கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தைவானைச் சுற்றிலும் சீனா முற்றுகையிட்டு, நேற்று நண்பகல் 12 மணிக்கு போர்ப்பயிற்சியைத் தொடங்கி உள்ளது. இந்தப் பிராந்தியத்தில் சீனாவின் மிகப்பெரிய போர்ப்பயிற்சி இதுதான் என சொல்லப்படுகிறது. இந்தப் போர் பயிற்சி வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நீடிக்கும் என தகவல்கள் கூறுகின்றன.

தைவான் நாட்டின் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு கடற்கரையையொட்டிய பகுதிகளில் சீனா அதிநவீன் ‘டாங்பெங்’ ஏவுகணைகளை வீசி சோதித்து வருகிறது. இந்த நடவடிக்கை, தங்கள் இறையாண்மையை மீறுவதாகவும், முற்றுகைக்கு சமமாக உள்ளதாகவும் தைவான் கூறுகிறது.

இதனிடையே, தனது ஆசிய பயணத்தின் ஒருபகுதியாக ஜப்பான் சென்ற நான்சி, சீன ராணுவ நடவடிக்கை குறித்து ஜப்பானில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது,

தைவானில் அமைதி நிலவ வேண்டும் என்பதே அவர்களுக்கிடையேயான உறவுமுறையை உருவாக்கியது. சீன அரசு, அமெரிக்க பிரதிநிதியான என்ன்னுடைய தைவான் பயணத்தை “ஒரு சாக்காக” பயன்படுத்தி அந்நாட்டின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது.

சீனா தைவானை தனிமைப்படுத்த முயலுகிறது. சமீபத்தில் கூட, தைவானை உலக சுகாதார அமைப்பிலிருந்து ஒதுக்கி வைத்துள்ளனர்.

இதுபோன்ற செயல்களால், சீனா, தைவானை மற்ற இடங்களுக்குச் செல்வதையோ அல்லது பங்கேற்பதையோ தடுக்க முயற்சி செய்யலாம். ஆனால் நாங்கள் தைவானுக்கு பயணிப்பதைத் தடுப்பதன் மூலம் சீனாவால் தைவானைத் தனிமைப்படுத்த முடியாது.

அமெரிக்க அதிபர் சீன அதிபருடன் தொடர்பு கொண்டுள்ளார். நாங்கள் இரண்டு பெரிய நாடுகள், எங்களுக்குள் தொடர்பு இருக்க வேண்டும்… வணிக நலன்கள் காரணமாக சீனாவில் மனித உரிமைகளுக்காக அமெரிக்கா பேசாவிட்டால், உலகில் எங்கும் மனித உரிமைகளைப் பற்றி பேசுவதற்கான அனைத்து தார்மீக அதிகாரத்தையும் அமெரிக்கா இழந்துவிடும்.

தைவான் உலகின் சுதந்திரமான நாடுகளில் ஒன்றாகும்” மற்றும் “ஒரு செழிப்பான பொருளாதாரம் கொண்ட ஒரு சிறந்த ஜனநாயகம். தைவானை தனிமைப்படுத்த அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது”.

இவ்வாறு கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.