உயிருக்கு அச்சுறுத்தல்; முன்னாள் அமைச்சரின் உதவியாளரான நடிகைக்கு சிறையில் 24 மணி நேர பாதுகாப்பு!

மேற்கு வங்கத்தில் நடந்த ஆசிரியர் தேர்வு முறைகேடு தொடர்பாக அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியும் அவருக்கு மிகவும் நெருக்கமான அர்பிதா முகர்ஜியும் கைது செய்யப்பட்டுள்ளனர். அர்பிதாவின் இரண்டு வீடுகளில் இருந்து ரூ.50 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதோடு 5 கிலோ தங்கம் மற்றும் சொத்து வாங்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தனது வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் தனக்கு சொந்தமானது இல்லை என்றும், தான் இல்லாத நேரத்தில் பணத்தை கொண்டு வந்து வைத்துவிட்டதாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகளிடம் அர்பிதா முகர்ஜி தெரிவித்துள்ளார்.

பார்த்தா சாட்டர்ஜி

அதேசமயம் பார்த்தா சாட்டர்ஜி எடுத்துள்ள அதிகமான எல்.ஐ.சி.பாலிசிகளில் வாரிசாக அர்பிதா முகர்ஜியை நியமித்திருந்தார். இதனால் அவர்களுக்குள் நீண்ட நாட்களாக தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதனிடையே சிறையில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அர்பிதா முகர்ஜி தெரிவித்துள்ளார். அமலாக்கப்பிரிவு அதிகாரிகளும் இதே கருத்தை நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

பார்த்தா சாட்டர்ஜி, உதவியாளர் அர்பிதா முகர்ஜி

இதையடுத்து அர்பிதாவுக்கு சிறையில் பாதுகாப்பு கொடுக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதோடு அவருக்கு கொடுக்கப்படும் உணவு மற்றும் தண்ணீரை சோதித்து கொடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பார்த்தா சாட்டர்ஜி தனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்று கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.

கடந்த மாதம் 23-ம் தேதி கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பிய சிறப்பு நீதிமன்றம் தேவைப்பட்டால் சிறையில் சென்று இருவரிடமும் விசாரித்துக்கொள்ளும்படி அமலாக்கப்பிரிவிற்கு அனுமதி கொடுத்துள்ளது. இருவரும் வேறு வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அர்பிதா முகர்ஜி ஜாமீன் கேட்டு இது வரை மனுத்தாக்கல் செய்யவில்லை. பார்த்தா சாட்டர்ஜியை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியுள்ளது. அதோடு ஊழலுக்கு இடமில்லை என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.